
Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுரஸ்ர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
திரேதாயுகத்தில் சோமுகாசூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் பூலோகம் மற்றும் தேவலோகத்தையும் வென்று பிரம்மலோகம் சென்றான்.பிரம்மலோகத்தில் பிரம்மா மற்றும் நான்கு வேதங்கள் மட்டுமே வாசம் செய்தனர். சோமுகாசூரன் வருவதை அறிந்த பிரம்மதேவன் வேதங்களை புத்தக வடிவமாக மாற்றிவிட்டு தான் மட்டும் மறைந்திருந்து கவனித்தார். பிரம்மலோகத்தில் யாரும் இல்லாததை கண்ட சோமுகாசூரன் கோபமுற்று நான்கு வேதபுத்தகங்களையும் எடுத்துக்கொண்டு சமுத்திரத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்.இதனைக் கண்ணுற்ற பிரம்மா ,கைலாயம் சென்று ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறி முறையிட்டர். வேதங்களை மீட்டு வரும் பணியை மகாவிஷ்ணுவிடம் ஈஸ்வரன் ஒப்படைத்தார். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து சோமுகாசூரனை வதம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். பிரம்மா புத்தக வடிவமாக இருந்த வேதங்களை பழைய நிலைக்கு மாற்றினார்.வேதங்கள் பிரம்மாவை நோக்கி அசுர தோஷம் நீங்க அருளுமாறு வேண்டினர். பூலோகத்தில் தாரகவனம் என்ற இடத்தில் சுயம்புவாக காட்சியளிக்கும் ஈஸ்வரனை தியானித்து பூஜித்தீர்களேயானால் தங்களின் அசுரதோஷம் நீங்கும்என பிரம்மா கூறினார். பிரம்மா கூறியவாறு வேதங்கள் தாரகவனம் சென்று ஈஸ்வரனை குறித்து தியானித்து பூஜித்தார்கள்.அப்போது ஈஸ்வரன் தோன்றி வேதங்களுக்கு அசுர தோஷம் நீங்க அருளினார். வேதங்கள் ஈஸ்வரனை தியானித்து பூஜித்து வந்த இடம் வேதஸ்ரேணி என்று பெயர் பெற்றது.பின் மருவி தற்போது வேளச்சேரி என பெயர் பெற்று வருகிறது. துவாபரயுகத்தில் மிருகண்டு என்னும் தவசிரேஸ்டர் தனக்கு பிள்ளைபேறு வேண்டும் என்று ஈஸ்வரனை குறித்து தவம் செய்தார்.இவரது தவத்தின் மேன்மை கண்டு அவருக்கு காட்சியளித்து தங்களுக்கு மகன் பிறப்பான் என்றும் அவன் பதினாறு வயது வரை மட்டுமே உயிர்வாழ்வான் என்றும் ஈஸ்வரன் அருளினார். மிருகண்டு தவசிரேஸ்டருக்கு மகன் பிறந்தான் அவனுக்கு மார்கண்டேயன் என்று நாமம் சூட்டப்பட்டது. மார்கண்டேயனுக்கு பதினாறு வயது நெருங்கும்போது பெற்றோர்கள் மிக்க கவலை அடைந்தனர். பெற்றோரின் நிலைமையை அறிந்த மார்கண்டேயன்,நான் திருக்கடையூர் சென்று ஈஸ்வரனை வழிபட போகிறேன்.ஆகையால் யமனைக்கண்டு அஞ்சவேண்டாம் என்று பெற்றோரிடம் கூறி ஆசி பெற்று திருக்கடையூர் வந்து ஈஸ்வரனை வணங்கி தியானித்து சிவ பூஜையில் ஈடுப்ப்பட்டான். மார்கண்டேயனின் ஆயுட்காலம் முடிவதைக் கண்டு மார்கண்டேயன் சிவலிங்கத்தை இறுக கட்டி தழுவிக்கொண்டான்.யமதர்மன் பாசக்கயிற்றை வீசி இழுக்கும்போது மார்கண்டேயனுடன் சிவலிங்கமும் இணைந்து இருப்பதைக் கண்டு அஞ்சினார்.உடன் ஈஸ்வரன் தோன்றி யமனை உதைத்து தள்ளி யமனின் தண்டத்தை பறித்துக்கொண்டான்.எனவே யமன் செயல் அற்றவராகிவிட்டார். ஈஸ்வரன் மார்கண்டேயனுக்கு என்றும் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு அருள்புரிந்தார்.தண்டத்தை இழந்த யமன் திக்பிரம்மை அடைந்து, சிவனருள் பெற வேண்டி கைலாயம் புறப்பட்டார்,வழியில் நாரதமுனிவர் காட்சியளித்தார்.அவரிடம் நடந்தவற்றை விவரமாக கூறி சிவனருள் பெற தான் கைலாயம் செல்வதாக கூறினார்.நாரதமுனிவர் யமனை தடுத்து நீர் கைலாயம் செல்வதற்கு பதிலாக பூலோகத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக தோன்றி முப்பத்து முக்கொடி தேவர்களுக்கு காட்சியளித்து அருளாசி வழங்கிய இடமான வேதஸ்ரேணி என்ற இடம் சென்று சிவபெருமானை தியானித்து பூஜித்தால் உமக்கு பிராயச்சித்தம் கிடைக்கும் என்று கூறி அருளினார்.நாரதமுனிவர் கூறியவாறு,எமதர்மராஜன் இத்தலம் வந்து தீர்த்தத்தை உருவாக்கி ஈஸ்வரனை தியானித்து பூஜித்தார் .அத்தீர்த்தமே யமதீர்த்தம் என்று பெயர்பெற்றது. யமதர்மனின் தியானத்திற்கு ஈஸ்வரன் மனம் இறங்கி காட்சியளித்து யமனுக்கு தண்டத்தை மீண்டும் தந்து அருளினார். யமன் ஈஸ்வரனிடம் ,ஐயனே தங்களின் அருளாசினால் மீண்டும் புணருத்துவம் பெற்றுவிட்டேன்.அதன் நினைவாக இத்தலம் அமைய வேண்டும் என்று வேண்டினார்.இன்று முதல் இத்தலம் தண்டீஸ்வரர்என்று பெயர் பெற்று விளங்கும் என்று ஈஸ்வரன் அருள்புரிந்தார்.ஆதலால் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூர்த்திக்கு தண்டீஸ்வரர் என்று பெயர் விளங்கி வருகிறது. கலியுகத்தில் ஞானிகள் ,யோகிகள்,சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் தோன்றி அறம்,நீதி மற்றும் பக்தி மார்க்கத்தை வளர்த்தார்கள்.அரசர்களும் தோன்றினார்கள் அவ்வழி தோன்றல்களான சோழர்கள் காலத்தில் இத்தலம் நிர்மணிக்கப்பட்ட்டது.இத்தலம் ஜெயங்கொண்டான் சோழ மண்டலத்தின் உட்பிரிவுகளாகவும் ,பூலியூர் கோட்டத்தில் பிரம்மதேயம் எனவும் வழங்கப்படுகிறது.ராஜேந்திரசோழனின் ஆறாம் நூற்றாண்டு ஆட்சிகாலத்தையும்,குலோத்துங்க சோழனின் இருபத்தைந்தாம் நூற்றாண்டு ஆட்சிகாலத்தையும்,ராஜகேசவர்மன் ஏழாம் நூற்றாண்டு ஆட்சிகாலத்தையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது.இதனை தொல்பொருள்ஆய்வுத்துறை இயங்குநர் திரு.இரா.நாகசுவாமிஅவர்களின் ஆய்வுக்குறிப்புகளிருந்து தெரிய வருகிறது. பதினேழாம் நூற்றாண்டின் சிறந்த சிவபக்தரான அப்பைய தீட்சிதர் அவர்கள் ஆரணிக்கு அடுத்த அடையபலம் என்ற ஊரில் பிறந்தார்.இவர் சிவதலங்களுக்கு சென்று சிவதரிசனம் பெற வேண்டி வேதஸ்ரேணி வந்து சிவனை வழிப்பட்டார்.அம்மையின்றி அப்பன் தனியாக இருப்பதைக் கண்டு அம்மையை பிரதிஷ்டை செய்ய எண்ணி வேள்வி செய்து யாகம் வளர்த்து ,தீர்த்தம் ஒன்றை உருவாக்கிஅத்தீர்த்தத்தில் இருந்து ஜலம் கொண்டுவந்து அம்பிகையை பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.அத்தீர்த்தம் அப்பைய தீர்த்தம்(தற்போது அப்ளாங்குளம்)என பெயர்பெற்றது.இத்தலத்தில் அப்பைய தீட்சிதருக்கு அம்பிகையின் கருணைக் கடாட்சம் கிடைத்தமையால் அம்பிகைக்கு கருணாம்பிகை என்ற பெயர்பெற்றது.ஆக இவ்வலாயம் ஸ்ரீ கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் ஆலயம் என விளங்கி வருகிறது. திருக்கடையூரில் யமனிடம் தண்டத்தை பறித்து இத்தலத்தில் தண்டத்தை கொடுத்ததால், இங்கு வரும் பக்தர்களுக்கு ஆயுள் விருத்தி அதாவது உக்ரஹ சாந்தி,சஷ்தியப்த பூர்த்தி,பீமரத சாந்தி,விஜயரத சாந்தி,சதாபிஷேகம்,கனகாபிஷேகம்,மகுடாபிஷேகம்,பூர்ணபிஷேகம்,ஆயுஷ்ஹோமம் எனஸ்ரீ கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மூலவர் தண்டீஸ்வரர் கிழக்கு நோக்கியும் அம்பிகை-கருணாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். இவ்வலாய சிறப்பு பூஜைகள் தினமும் ஆறு காலமும் நடைப்பெற்று வருகிறது.காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை உஷட் காலம்,எட்டரை மணி முதல் ஒன்பதரை வரை மணி வரை காலசந்தி பூஜையும்,பத்தரை மணி முதல் 11:15 வரை உசிகல பூஜையும்,மாலை நான்கரை மணி முதல் 5:15 மணி வரை பிரதோஷ காலமும்,ஆறு மணி முதல் ஏழு மணி வரை சாயரட்சை காலமும்,இரவு 8:15 முதல் ஒன்பது மணி வரை அர்த்தஜாம பூஜையும் நடைபெற்றுவருகிறது.
யம தீர்த்த குளம்
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எளிய முறையில் நன்கொடை செலுத்துவதற்கான விரைவான பதில் குறியீடு இத்திருக்கோயில் நுழைவு வாயிலில் அர்ச்சனை சீட்டு விற்பனை செய்யுமிடத்தில் ஒட்டப்பட்டுள்ளது
அன்னதனம் திட்டத்தில் 100 பக்தர்களுக்கு தினமும் மதியம் 12.00 மணிக்கு இலவச உணவு விநியோகிக்கப்படுகிறது.
திருக்கோயில் நுழைவின் வெளிப்பிரகார தூணில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது
கோவிலுக்கு வெளியே தெற்கு பகுதியில் அமைந்துள்ளது
திருக்கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ளது.





