அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை

Century
12th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
துவித்தலம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மருதமரம்
இத்திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 23-04-2022 அன்று துவங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பிரசாதம் விவரங்கள் பின்வருமாறு : 1.காலை 6 மணி முதல் 7 மணி வரை - பஞ்சாமிர்தம் 2.காலை 7 மணி முதல் 10 மணி வரை - கற்கண்டுசாதம் 3. காலை 10 மணிமுதல்மதியம் 3 மணி வரை - சம்பாசாதம் 4. மதியம் 3 மணிமுதல்இரவு 7 மணி வரை - புளிசாதம் 5. இரவு 7 மணி முதல் நடை சாத்தப்படும் வரை - தினைமாவுஉருண்டை
மருதமலையை மருந்து மலையெனக் கூறத்தக்க வகையில் மக்களின் உடற்பிணியும் மனப்பிணியும் நீக்கும் மூலிகை நிறைந்த மலைப்பகுதியாகும். மலைமீது உள்ள இத்திருக்கோயிலை சென்றடைய நடந்து செல்ல படிப்பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல தார்சாலையும் உள்ளது. படிப்பாதை துவக்கத்தில் சுயம்பு மூர்த்தியாக தோன்றிய தான்தோன்றி விநாயகர் சன்னதி உள்ளது. இதனை வழிபட்டு மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது. அதற்கு மேலே படிப்பாதையில் செல்லும்பொழுது எழில்மிகு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் குதிரைக்குளம்பு போன்ற சுவடு படிப்பாதையில் காணப்படுகிறது. இது முருகப்பெருமான் சென்ற குதிரையின் குளம்படி எனச் செவி வழி செய்தியாக கூறப்படுகிறது. படிப்பாதை சென்றடையும் இடத்தில் நேரே ஆதிமூலஸ்தானம் உள்ளது. இதில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுட்ன் உருவமில்லாமல் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இவர் ஆதியிலேயே தோன்றிய சுயம்பு மூர்த்தியாகும். இது தலத்தின் சிறப்பு அம்சமாகும். இவரை தரிசித்து மேலே வரும்பொழுது கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணைமரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்து செழிப்பாக ஒற்றை மரம் போல் காட்சியளிக்கிறது. இதன் கீழே ஐந்து முக விநாயகர் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காட்சி வேறு எங்கும் காணகிடைக்காததாகும். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் இத்தலத்தில் முருகப்பெருமானை பூஜித்ததாகவும், சுவாமி அவருக்கு பாம்புருவில் காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு சான்றாக சித்தர் சன்னதியில் உள்ள பாறையானது பாம்பு போன்ற வடிவில் இயற்கையாகவே அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். அது மட்டுமின்றி இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியசுவாமி தென்புறம் அருள்மிகு பட்டீஸ்வரர் சன்னதி, வடபுறம் அருள்மிகு மரகதாம்பிகை சன்னதி என அம்மை அப்பன் இடையே அமையப்பெற்ற திருக்கோலம் சோமாஸ்கந்தர் திருக்கோலம் ஆகும்.
பிரதான சன்னதிக்கு எதிரே உள்ள சோபன மண்டபத்தில் இடதுபுறமாக வரதராஜப் பெருமாள் சன்னதி அமையப்பெற்றுள்ளது.
பிரதான சன்னதிக்கு இடதுபுறமாக உள்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்மிகு மரகதாம்பிகை சன்னதி அமைந்துள்ளது. சூரசம்கார உற்சவத்தின்போது அருள்மிகு சுப்பிரமணியர் இச்சன்னதியில்தான் அருள்மிகு மரகதாம்பிகை அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் நடைபெறும்.
திருக்கோயில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி செல்வோமானால் அங்கு பாம்பாட்டிச் சித்தர் சன்னதி அமைந்துள்ளது. அங்கு உள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது. பாம்பாட்டிச் சித்தருடைய கோயிலுக்கும் ஆதி மூலஸ்தானத்திற்கும் இடையே சுரங்க வழி உண்டு. அதன் வழியாக சித்தர் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானை வழிபட்டார் என்பர். முருகப் பெருமான் அருள்பெற்று மக்களின் பிணி நீக்கி, பாம்பாட்டிச் சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார். இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு பாலும் பழமும் உண்டு செல்வதை இன்றும் காணலாம். தற்போதும், பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளித்து வருகின்றனர். பாம்பாட்டிச் சித்தரை வழிபடும் அன்பர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும். இச்சித்தரை வழிபட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையை பெறுவர். இங்கு தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.
பிரதான சன்னதிக்கு வலதுபுறமாக உள்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்மிகு பட்டீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு மரகதாம்பிகை சன்னதிக்கு எதிரே நவக்கிரகங்கள் சன்னதி அமையப் பெற்றுள்ளது.
சுப்பிரமணியசுவாமி
அருள்மிகு பாம்பாட்டி சித்தர் திருக்கோவிலுக்கு செல்லும் வழியில் வலப்புறமாக அருள்மிகு சப்தகன்னிமார் சன்னதி அமையப்பெற்றுள்ளது.
படி ஏறி மலையை அடைந்தால் நேரே இச்சந்நிதி உள்ளது. இங்குள்ள சந்நிதி அருவுருவத் திருமேனியாக லிங்க வடிவில் உள்ளது. வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர் மூவரும் லிங்க வடிவத்தில் காட்சி தருகின்றனர். முதலில் ஆதி மூலஸ்தானமாகியஇங்கு வள்ளி தெய்வயானையாருடனாகிய சுப்பிரமணிய சுவாமிக்கு பூசை தொடங்கப் பெறும்.
மலையடிவாரத்தில் படிகட்டுப் பாதையின் தொடக்கத்தில், தான்தோன்றி விநாயகர் கோயில் உள்ளது. இவ்விநாயகரின் இயற்கையமைப்பு மிக்க அழகுடையதாகவும், பிற தலங்களில் காண்பதற்கு அரியதாகவும் உள்ளது. இப்பெருமானின் சிறப்புகளை மிக்க தமிழ்ப் புலவர் பலர் மேனரமேலும் போற்றிசைக்க தக்க புகழ் மருதமலைத்தான்தோன்றிக் கணபதியே என மருதமலைத் தான்தோன்றிப் பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார். தான்தோன்றி விநாயகரை வணங்கிச் சென்றால் சரியாகப் 18 படிகளைக் கொண்ட பதினெட்டாம்படி உள்ளது. சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட இயலாதவர்கள் இப்பதினெட்டாம் படிக்கு வந்து வழிபட்டுச் செல்வர்.
படிப்பாதையில் தான்தோன்றி விநாயகரை தரிசித்து விட்டு மலைக்கு செல்லும்போது வழியில் இடும்பன் சன்னதி உள்ளது,இடும்பன் கோயிலில் இடும்பனின் உருவம் உருண்டை வடிவமான பெரிய பாறையில் உள்ளது. காவடியைச் சுமந்து கொண்டிருக்கும் தோற்றத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்குமாதலால் பக்தர்கள் இடும்பனை வணங்கிப் பயன்பெறுவர்.
மலைக்கோயிலை சென்றடையும்போது கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணைமரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்து செழிப்பாக ஒற்றை மரம் போல் காட்சியளிக்கிறது. இதன் கீழே ஐந்து முக விநாயகர் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார், பக்தர்கள் இவரை தரிசித்த பின்னரே மூலவரை தரிசனம் செய்வர்.
தினசரி திருக்கோயிலுக்கு வரும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 23.02.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரிச்சட்டம் 80(ஜி)-ன் (.127(1)-//2010-11 தேதி 25.08.2011) கீழ் வரி விலக்கும் பெறலாம்.
நன்கொடை : பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு முதலுதவி மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பக்தர்களுக்கு பயன்படும் வகையில் அஞ்சல் வழியில் பிரசாத சேவை
இத்திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் மாற்றுதிறனாளி பக்தர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பயன்பாட்டிற்காக பக்தர்கள் தங்களது காலனிகளை பாதுகாப்பாக விடுவதற்கு அடிவாரம் படிப்பாதை தொடக்கத்தின் வலது புறத்திலும். மலைமேல் படிப்பாதை தொடக்கத்தின் வலது புறத்திலும் கட்டணமில்லா காலணிகள் பாதுகாப்பு நிலையம் உள்ளது.
இத்திருக்கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக முதலுதவி மருத்துவமனை வசதி மலைமேல் முடிகாணிக்கை மண்டபம் அருகில், படிப்பாதையின் இடது புறத்தில் அமைந்துள்ளது.
பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற தங்கரத உலா கட்டணம் ரூ.2000/- செலுத்தி மாலை 6.00 மணிக்கு தங்கரதம் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
பக்தர்களின் கழிவறை வசதிக்காக ஆண்கள் கழிப்பிடம் 10, பெண்கள் கழிப்பிடம் 10 எண்ணிக்கையில் உள்ளது. தினந்தோறும் தூய்மை செய்யப்பட்டு வருகிறது.
மலைமேல் முடிகாணிக்கை மண்டபம் அருகில் இலவச குழியல் அறை வசதி (ஆண்கள்-2, பெண்கள்-2) அமைக்கப்பட்டுள்ளது.
மலைமேல் பக்தர்களின் வசதிக்காக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
மலைமீது முடிகாணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களுக்கு முடிகாணிக்கை மண்டபம் உள்ளது.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்களில் ஒன்றான எடைக்கு எடை பழங்கள், கற்கண்டு மற்றும் நாணயங்கள் வழங்குவதற்கு ஏதுவாக மலைமேல் நவகிரக சன்னதி அருகில் துலாபாரம் வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் பயன்பாட்டிற்காக மலைமேல் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் மூன்று மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்வதற்கும், மலைமேலிருந்து அடிவாரம் வருவதற்கும் குறைந்த கட்டணமாக நபர் 1-க்கு ரூ.10/- கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக மலை அடிவாரத்தில் 10 சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளது.
திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மலைமேல் பாம்பாட்டி சித்தர் செல்லும் வழி அருகில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆர்.ஓ.பிளாண்டும் மற்றும் மலைமேல் காலணிகள் பாதுகாப்பு நிலையம் அருகில் 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆர்.ஓ.பிளாண்டும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயில் மூலம் பெற்றோர்கள் முன்னிலையில் காதுகுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயில் மூலம் அரசு வழி நெறிமுறைகளின் படி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இரு வீட்டாரிடம் பெறப்படுகிறது. விண்ணப்பங்களில் உள்ள விபரங்கள் பரிசீலனை செய்தபின் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று வருகிறது.




