அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம்

Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
கஜாப்ப்ருஷ்டம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
ஏழு நுழைவாயில்கள் - முக்திப்பேறு உயிர்களின் பிறப்பு என்பது ஏழுவகை. அவை தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என்பதாகும். ஒவ்வொரு உயிரும், பிறவிதோறும் செய்யும் நல்வினை, தீவினைக்கேற்றவாறு பல்வேறு பிறவியெடுக்கிறது. முத்திப்பேறு என்பது வினைநீக்கம்பெற்றுப் பெருமானுடன் இரண்டறக் கலத்தலாகும். இத்தலத்துப் பெருமான் வீடுபேற்றை (முக்தி) அளிப்பதால், பிறவிப்பிணியை நீக்கும்வண்ணம் ஏழு நுழைவாயில்கள் உள்ள இத்திருக்கோயிலில், உயிர்களின் ஆறாவது பிறப்பான மானிடர்கள் ஆறு நுழைவாயில்களைக் கடந்துச் சென்றால், இறைவனை (வியாக்ரபுரீசர்) அருகிலிருந்து தரிசிக்கலாம். உயிர்கள் தளைகள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கி தேவராகப் பிறப்பெய்தும்போது, ஏழாவது நுழைவாயிலைக் கடந்து சென்று இறைவனோடு கலந்து இறையின்பம் நுகரலாம்.
ஏழு நுழைவாயில்கள் - முக்திப்பேறு உயிர்களின் பிறப்பு என்பது ஏழுவகை. அவை தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என்பதாகும். ஒவ்வொரு உயிரும், பிறவிதோறும் செய்யும் நல்வினை, தீவினைக்கேற்றவாறு பல்வேறு பிறவியெடுக்கிறது. முத்திப்பேறு என்பது வினைநீக்கம்பெற்றுப் பெருமானுடன் இரண்டறக் கலத்தலாகும். இத்தலத்துப் பெருமான் வீடுபேற்றை (முக்தி) அளிப்பதால், பிறவிப்பிணியை நீக்கும்வண்ணம் ஏழு நுழைவாயில்கள் உள்ள இத்திருக்கோயிலில், உயிர்களின் ஆறாவது பிறப்பான மானிடர்கள் ஆறு நுழைவாயில்களைக் கடந்துச் சென்றால், இறைவனை (வியாக்ரபுரீசர்) அருகிலிருந்து தரிசிக்கலாம். உயிர்கள் தளைகள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கி தேவராகப் பிறப்பெய்தும்போது, ஏழாவது நுழைவாயிலைக் கடந்து சென்று இறைவனோடு கலந்து இறையின்பம் நுகரலாம்.
கருவறை அமைப்பு இத்திருக்கோயிலின் கருவறை கஜப்பிருஷ்டம் எனப்படும் தூங்காணை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது. கருவறையில் வியாக்ரபுரீசர் சதுர வடிவ ஆவுடையார்மேல் மிக உயர்ந்த இலிங்கத் திருமேனி கொண்டு, கிழக்கு முகமாக எழந்தருளியுள்ளார். புலி இறைவனை வழிபடும்போது ஏற்பட்ட நகத்தடங்களை இன்றும் லிங்கத் திருமேனியில் காணலாம். இலிங்கத் திருமேனியில் குடுமி கொண்ட சதாசிவமூர்த்தி இத்தலத்தினைத் தவிர வேறெங்குமில்லை. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் சுரங்கம் ஒன்று உள்ளது. போர்க்காலங்களிலும், பிற இடர்ப்பாடுகள் நேரிடும் போதும் திருக்கோயிலிலுள்ள உற்சவத் திருமேனிகளையும், விலை உயர்ந்த அணிவகைகளையும் இத்தகைய சுரங்கங்களில் வைத்து பாதுகாக்கும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. தவிர, போர்க்காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்பிச்செல்வதற்கும் மன்னர்கள் சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவதுண்டு. கலையழகு இத்திருக்கோயிலின் மூன்று நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும், அதற்கருகில் அழகிய படிகளைக் கொண்ட திருக்குளமும் உள்ளது. இதற்கருகில் காண்போரைக் கவரும் வண்ணம் அழகிய கற்சக்கரங்களுடன் கூடிய நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. மிகவும் பழுதடைந்துள்ள இம்மண்டபம் தற்போது செய்யப்பட்டு வரும் திருப்பணியில் புதுப்பிக்கப்படவுள்ளது. திருக்கோயில் மூன்றுநிலை இராஜகோபுரத்துள் நுழைந்தவுடன் முதலில் காட்சியளிப்பது 16 கால் மண்டபமாகும். இம்மண்டபத்தில் இத்திருக்கோயிலின் வரலாற்றை விவரிக்கும் வகையில் புலி இலிங்கபூசை செய்யும் சிற்பமும், வியாக்ரபாதர் இலிங்கபூசை செய்யும் சிற்பமும் அனைவரும் கண்டு வணங்கவேண்டிய ஒன்றாகும். நரசிம்மப்பெருமான் இரண்யாசுரனை வதைக்கும் சிற்பம், கங்காளர் சிற்பம், மகிஷாசுரமர்த்தினி சிற்பம், பஞ்சாக்னியின்மேல் காமாட்சியம்மை ஒற்றைக்காலில் தவம் செய்வது, கண்ணப்பநாயனார், உலகளந்தபெருமாள், மாகாளன் எனும் பாம்பு சிவனைப் பூசிப்பது மற்றும் அனுமன் ஆகிய சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அம்மண்டபத் தூண்களில் வடிக்கப்பட்டுக் காலவெள்ளத்தில் அவை சிதைந்துள்ளது. திருக்கோயிலினுள் முதல்பிராகாரத்தில் உள்ள ஒவ்வொரு உருளைவடிவத் தூண்களிலும் கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர், எறிபத்தர், மெய்ப்பொருள்நாயனார், இயற்பகையார், விறன்மிண்டர், திருநீலகண்டர், அரிவட்டாயர், அப்பூதி அடிகள், மானக்கஞ்சாறர், ஏனாதிநாதர், குங்குலியக்கலையர், அமர்நீதியார் 6 601 நாயன்மார்களின் பெயர்கள் ஒவ்வொன்றாகப் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நுழைவாயிலில் இருபுறங்களிலும் சுவற்றில் துர்க்கையும், பைரவரும் எழுந்தருளி இத்திருக்கோயிலைக் காத்து வருகின்றனர். வியாக்ரபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருச்சன்னிதியைச் சுற்றி கோஷ்டங்களில் வினாயகருக்குமேல் சிவகாமி அம்பாளுடன் நடராஜர் சிற்பமும், திருமாலுக்குமேல் தேவியருடன் பரமபதநாதன் வீற்றிருக்கும் சிற்பமும், துர்க்கைக்கு மேல் துர்க்கை மகிஷாசுரனுடன் போர்செய்வதுபோன்ற சிற்பமும் மிகவும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுக் காண்போரை வியக்கவைக்கிறது. கோஷ்ட திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் நின்ற நிலையில் உள்ள அனுக்ரக நரசிம்மப்பெருமான் திருக்கோலம் கண்டு வணங்குவோரது பயத்தைப் போக்குகிறது. கருவறைக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் வலப்புறம் இரண்டு சிங்கங்கள் தங்களது தலைமேல், தளத்தினை தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள தூண்கள் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம். பல்லவ மன்னர்களின் இராஜகோபுர நுழைவாயிலிலிருந்து, ஒவ்வொரு நுழைவாயிலும் சற்று உயரமாக அமைந்து, இறுதியில் ஏழாவது நுழைவுவாயிலைக் கடந்தால் உயர்ந்த கருவறையில் மூலவர் எழுந்தருளி திருவருள் புரிந்து வருகின்றனர்.
பிரார்த்தனைத் தலம் இத்திருக்கோயில் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள மகாதேவரை வணங்கியே புலியாக சாபம்பெற்ற மிருகண்டு முனிவர், பிறவிப்பிணி நீங்கி வீடுபேறு பெற்றார். பிறவிப்பிணியை நீக்கும் ஏழு நுழைவாயில்கள் (உயிர்களின் பிறப்புக்கள் ஏழு) அமையப்பெற்ற திருக்கோயில் இதுவாகும். இப்பெருமானைப் பூஜித்து வியாக்ரபாத முனிவர் உபமன்யுவை மகனாகப்பெற்றார். குலோத்துங்க சோழனும் இவ்விடத்து யாகஞ்செய்து, வியாக்ரபுரீசப் பெருமானை வணங்கிக் குழந்தைப்பேறு பெற்றான். இங்கு பதினெட்டு சோமவாரங்கள் வருகைதந்து, நெய்விளக்கேற்றி, அர்ச்சித்து வணங்குபவர்கள் குழந்தைப்பேற்றைப் பெறுவர். சிம்மராசியினர் பதினெட்டு குருவாரங்கள் நெய்விளக்கேற்றி, அர்ச்சித்து சிம்ம தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் ராஜயோகம் பெற்று எல்லாத் துறைகளிலும் ஏற்றமும் வழக்குகளில் வெற்றியும் பெறுவர். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அனுக்ரக நரசிம்மப் பெருமானை பிரதோஷ காலத்தில் வணங்கிவந்தால் வாழ்வில் மரணபயம் நீங்கி மகிழ்ச்சியுண்டாகும். பிரதோஷ வேளையன்று நந்திதேவரின் கொம்புகளுக் கிடையில் உயிர்கள் மகிழும் வண்ணம் பெருமான் திருநடனம் புரிகின்றனர். பிரதோஷ வேளையிலேதான், நரசிம்மப் பெருமாள் இரண்யனை வதம் செய்யத் தோன்றினார். ஆதலால் வைணவர் பிரதோஷ வேளையில் நரசிம்மப்பெருமாளைப் பூஜிப்பர். இத்தலத்தில் புலிவலப்பெருமானை வலம் வருவோர், நரசிம்மப் பெருமாளையும் சேர்ந்தே வலம்வரும் வண்ணம் இத்திருக்கோயில் அமைப்பு உள்ளது. தனிச்சிறப்பாகும் . பதினெட்டு சுக்கிரவாரங்கள் எலுமிச்சை விளக்கேற்றி அமிர்தகுஜாம்பாளை வணங்கினால் தீராத நோய்களும் தீர்ந்து சொர்ணமயமான தேகம் பெற்று நலமுடன் வாழ்வர்.
சுயம்பு லிங்கம் திருப்புலிவனம் எனும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வியாக்ரபுரீசப் பெருமான் சுயம்புவாய்த் தோன்றினார்.
ஆர்ஷித லிங்கம்-முனிவர்கள் வழிபட்ட லிங்கம் வியாக்ரபாத முனிவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள புலிவனப் பெருமானை வணங்கி சந்தானப் பேற்றைப் பெற்றனர். பிறகு முனிவர், அடியேனை சம்சார பந்தத்திலிருந்து விடுவித்தருள வேண்டும் எனப் பெருமானிடம் வேண்டி நின்றனர். அதன்படி அம்முனிவருக்குப் பெருமான், யோகத்தின் சிறப்பை உணர்த்தியருளி, ஆலமர் செல்வராக அருள் செய்தனர். பிறகு முனிவர் இவ்விடத்து முத்தீஸ்வரர் எனும் பெயரால் இலிங்கம் ஸ்தாபித்து வணங்கியிருந்து வீடுபேறடைந்தனர். இச்சன்னிதி வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. பல சித்தர்கள் இவ்விடத்து வணங்கியிருந்து விரும்பிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.
முத்தீஸ்வரர் சன்னிதி வியாக்ரபாத முனிவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள புலிவனப் பெருமானை வணங்கி சந்தானப் பேற்றைப் பெற்றனர். பிறகு முனிவர், அடியேனை சம்சார பந்தத்திலிருந்து விடுவித்தருள வேண்டும் எனப் பெருமானிடம் வேண்டி நின்றனர். அதன்படி அம்முனிவருக்குப் பெருமான், யோகத்தின் சிறப்பை உணர்த்தியருளி, ஆலமர் செல்வராக அருள் செய்தனர். பிறகு முனிவர் இவ்விடத்து முத்தீஸ்வரர் எனும் பெயரால் இலிங்கம் ஸ்தாபித்து வணங்கியிருந்து வீடுபேறடைந்தனர். இச்சன்னிதி வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. பல சித்தர்கள் இவ்விடத்து வணங்கியிருந்து விரும்பிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மூவர் சன்னிதி அம்பாள் சன்னிதியின் முன்புறம், இத்திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து, மூவேந்தர்கள் ஸ்தாபித்து வணங்கிய சோழீஸ்வரர், பாண்டியரேஸ்வரர், சேரலேஸ்வரர் என்ற மூன்று இலிங்கங்கள் உள்ளன.
ஸ்ரீ சிம்ம தட்சிணாமூர்த்தி குரு என்னும் வடசொல் பெரிது எனவும் பிதா எனவும் அரசன் எனவும் ஆசாரியன் எனவும் பொருள்படும். அதனால் எல்லாவற்றிலும் பெரியபொருளாகவும், மேலான தந்தையாகவும், சிறந்த அரசனாகவும், ஆசாரியனாகவும் உள்ளவர் குரு எனப்படுவார். கு என்றால் இருள், அறியாமை எனவும், ரு என்றால் போக்குகின்றவர் எனவும் பொருள்படும். உயிர்களிடத்திலுள்ள அஞ்ஞானமாகிய இருளை போக்குகின்றவர் குரு எனவும் கூறப்படுவார். அந்தவகையில் ஈரேழு உலகத்திற்கும் ஆதிகுருவாக விளங்குபவர் சிவபெருமான். ஒரு சமயம் திருக்கயிலையில் பெருமானும் தேவியும் வீராசனத்தில் எழுந்தருளியிருந்தனர். அப்போது பிரமதேவனின் புதல்வர்களாகிய சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன் ஆகிய நால்வரும் அவ்விடத்து வருகைதந்து, பெருமான் திருமுன்பு சென்று, அவனடி விழுந்து வணங்கி, பரம்பொருளே யாங்கள் மறைகள், ஆகமங்கள் ஆகியன யாவும் கற்றும் மனம் தெளிவடையாமல், வருந்துகின்றோம். ஆதலால் அடியேங்கள் தெளியும் வண்ணம் வேதத்தின் உண்மைப் பொருளை உபதேசித்தருளவேண்டும் என்று வேண்டி நின்றனர். அம்முனிவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய பெருமான், அவர்களை அமரச்செய்து ஞானதிசையான ன தென் திசை நோக்கியவாறு கல்லாலின் நிழலில் ஆதிகுருவடிவாய் தட்சணாமூர்த்தி வடிவம் தாங்கியருளினர். இவ்விதமாய் எழுந்தருளிய பெருமான் நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் கற்றறிந்த வல்லவர்களாகிய சனகாதியர் நால்வருக்கும், அவர்களின் அஞ்ஞான மயக்கம் நீங்குதற் பொருட்டு, உண்மைப்பொருளை வாக்கினாலே சொல்லாமல் அறிவுக்கு அறிவாய்த் தன் திருக்கரத்தில் சின்முத்திரையினால் உபதேசித்து உண்மையை உணர்த்தினர். பெருமான் வாக்கினாலே சொல்லாமல் உணர்த்திய உண்மையை உணர்ந்த அம்முனிவர்கள், பெருமானின் திருவருளை எண்ணி இன்புற்றுப் புலனடக்கமும், மன அமைதியும் பெற்றனர். பிறகு அம்முனிவர்கள் மேன்மேலும் சிவஞானம் பெறவேண்டும் என்று விரும்பி தேவரீர், அடியேங்களது ஐயத்தைப் போக்கியருளினீர். ஆயினும் எங்கள் மனம் ஒரே நிலையில் நிற்பதற்குரிய யோக மார்க்கத்தையும் உபதேசித்தருளவேண்டும் என்றும் பணிந்து வேண்டினர். அதனைக்கேட்ட ஞானதிசைப் பெருமானார், பிரமபுத்திரர்களே, ஆன்மாவாகிய அரசன் வாழ்ந்துவரும் சரீரம் ஐம்பூதங்களாலாகிய தேராகும். அத்தேர் மனம் என்னும் குதிரையால் கட்டப்பட்டுள்ளது. அக்குதிரையின் கடிவாளத்தை அறியாமை என்னும் சாரதியிடம் கொடுத்தால், அவன் அந்த தேரையும், அதில் அமர்ந்திருக்கும் ஆன்மாவாகிய அரசனையும் ஆழ்ந்த குழியில் தள்ளித் துன்பம் அடையச்செய்வான். ஆனால் அறிவு என்னும் சாரதியிடம் கடிவாளத்தைக் கொடுத்தால் தேர் இனிமையாகவும், மேடு பள்ளங்களில் துயரப்படாமலும் அமைதியாகச் செல்லும். ஆன்மாவாகிய அரசனும் இன்புறுவான். அதுபோல மனதைத் தீய வழிகளில் செலுத்தாமல் நல்ல வழியில் செலுத்தினால் ஆன்மாவானது பேரின்பப் பெருவாழ்வில் திளைத்து மகிழும். அந்த மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு யோகமார்க்கம் சிறந்தவழியாகும். அம்மார்க்கத்தால் நம்மை அடைந்து நம்மோடு இரண்டறக்கலந்து என்றும் இறவா இன்பமடையலாம் என்றருளி, அம்முனிவர்களுக்கு யோக மார்க்கத்தினை உணர்த்தினர். இவ்வாறு சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் உண்மைப் பொருளையும், யோக மார்க்கத்தையும் அருளிய ஆதிகுருவான சிவபெருமான், இத்தலத்தில் உத்குடிகாசன நிலையில் அமர்ந்தவாறு ஆலமர் செல்வராக யோகநிலையில் எழுந்தருளி, வியாக்ரபாத முனிவருக்கு யோகத்தின் சிறப்பை உணர்த்தியருளினர். பெருமானின் திருவடியில் வல, இடப் புறங்களில் சனகாதி முனிவர்கள் சின்முத்திரையுடன் உள்ளனர். அவர்களுக்கு மேலே பெருமானின் வலப்புறம் வீணை இசைத்தபடி நின்ற நிலையில் கின்னரர்களும், இடப்புறமாக அமர்ந்த நிலையில் கிம்புருடர்களும், அவர்களுக்கு மேல் வலப்புறம் புலியின்மீது வணங்கிய நிலையில் ஒரு துவார பாலகரும், இடப்புறம் சிம்மத்தின்மீது ஒரு துவார பாலகரும் உள்ளனர். திருமுடி ஜடாபாரம் கொண்டு, வலப்புறமேற்கையில் ஜபமாலையும், வலப்புறக்கீழ்க்கையில் சின்முத்திரையும், இடப்புறமேற்கையில் அக்னியும், இடப்புறக்கீழ்கை திருவடியை நோக்கியும் அமைந்துள்ளது. வலது திருவடி முயலகன்மீதும், இடது திருவடி சிம்மத்தின்மீதும் பொருந்தி சிம்மத்தை அடக்கியாளும் சிம்ம தட்சணாமூர்த்தியாகப் பெருமான் எழுந்தருளி யுள்ளனர். சிம்மராசியில் பிறந்தவர்கள் இப்பெருமானைக் குருவாரத்தில் தொடர்ந்து வணங்கிவந்தால் வாழ்வில் ராஜயோகம் பெற்றுத் திகழ்வர் என்பது திண்ணம். ஒருவன் அடையவேண்டிய பாக்கியங்களை நமது சாத்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகப் பகுத்துள்ளன. இவற்றிற்குச் சதுர்வித புருஷார்த்தங்கள் என்று பெயர். இவ்வித பாக்கியங்களுள் முதல் மூன்று புருஷார்த்தங்களை ஒருவன் எளிதாக அடைய முடியும். நான்காவதான வீடுபேறு ஞானத்தை அருளும் பெருமானை வணங்கினால் மட்டுமே கிட்டும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிம்ம தட்சணாமூர்த்திப் பெருமானை வணங்கு பவர்களுக்குப் பெருமான், இன்பப்பேறு மற்றும் வீடுபேறு எனும் இருவித புருஷார்த்தங்களை அருளுவதோடு யோக மார்க்கத்தையும் அருளுகிறார்.
அம்பாளின் திருப்பெயர் அமிர்தகுஜாம்பாள் என்பதாகும்.அதாவது பெருநல முலையம்மை என்பதாகும்.பெயரிலேயே அமிர்தத்தை கொண்டு விளங்கும் அம்பாளைப் பதினெட்டு வாரங்கள் தொடர்ந்து வணங்கினால் தீராத நோய்களும் விலகிப் பூரண உடல்நலம் பெற்றுத் திகழ்வர்.வந்து வணங்குவோர் வியக்கும் வண்ணம் எழிலார்ந்த கோலத்துடன் புன்முறுவல் பூத்தவண்ணம் நின்றநிலையில் தனிக்கோயில் கொண்டு தென்திசை நோக்கி அம்பாள் திருக்காட்சி கொண்டருளுகிறாள்.
புலிவல தீர்த்தம்
கண்ணப்பநாயனார் சிற்பம் கருங்கல் தூண்களில் உள்ளது.





