அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம்

Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மகிழம்பூ மரம்
மகிழம் மரம் ஸ்தல விருட்சம் அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதிக்கு எதிர் திசையிலும் திருக்கோயிலின் கிழக்கு திசையிலும் அமைந்துள்ளது.
திருக்கோயில் சிறப்புகள்: இத்திருக்கோயிலில் நீதி வழங்கும் தேவதையாக வீற்றிருக்கக்கூடிய அருள்மிகு பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலையும், செவ்வரளி மாலையும் அணிவது விஷேசம். அவ்வாறு எலுமிச்சம் பழ மாலையைச் செலுத்தும் பக்தர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். மனதில் அமைதி உண்டாகும். எனவே காலம் காலமாக இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதத்துடன் அம்மன் சன்னதியில் பூஜிக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தைப் பிரசாதமாக வழங்கி வருகின்றனர். அபிஷேகம்: இத்திருக்கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் அருள்மிகு பத்திரகாளியம்மனுக்குப் பக்தர்களால் பால் அபிஷேகம் செய்து வருவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். அம்மனுக்கு பௌர்ணமி பூஜையன்று பக்தர்களால் பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள், பால், தேன், எண்ணெய், நெய் முதலிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்வதால் பக்தர்கள் வேண்டுதலை ஏற்று அன்னை பத்திரகாளியம்மன் அருள் வழங்குகிறாள். காசு வெட்டுதல்: பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்தருளும் அன்னை காளியின் சிறப்பம்சங்களில் காசு வெட்டிப் போடுதல் மிகச்சிறப்பான அம்சமாகும். ஒரு வகையில் நீதியின் தேவதையாகவே இம்மக்கள் காளியை வணங்கியுள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும். இத்திருக்கோயிலில் ஈரத்துணியுடன் காசுவெட்டிப் போட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, சொத்துத் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றில் நீதி கிடைக்காமல் ஏமாந்தவர்கள், ஏமாற்றப்படுபவர்கள் இவர்களுக்கு எல்லாம் நீதி வழங்கும் தேவதையாக அன்னை காட்சி தருகிறாள். இத்திருக்கோயிலில் காசு வெட்ட வருபவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் காளியின் சன்னதிக்கு எதிரே உள்ள காசு வெட்டும் இடத்தில் காசினை வெட்டிப் போட்டுவிட்டு காளியிடம் முறையிட்டபின் கிழக்கு வாசல் வழியாக உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம் ஆகும். சத்தியம் செய்தல்: இத்திருக்கோயிலில் காசு வெட்டிப் போட்டு பழி தீர்த்தல் எப்படி ஒரு முறையாக, நீதியாக பக்தர்கள் நினைக்கின்றார்களோ அதைப் போலவே கொடுக்கல், வாங்கல், சொத்துத் தகராறு போன்றவற்றில் கருத்து வேறுபாடு உடைய இருவருமே இங்கே வந்து சன்னதிக்குக் கீழே உள்ள பூதத்தை கட்டிக் கொண்டு கழுத்தில் அரளிமாலையை அணிந்து நான் கொடுத்தது உண்மை என்றும், மற்றவர் அதை மறுத்துப் பேசுவதும் அவரவர் காளியின் முன் சத்தியம் செய்வதை இக்கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். விஷேச நாட்கள்: செவ்வாய்கிழமை: அருள்மிகு பத்திரகாளியம்மன் நவகிரகங்களுக்குக் கட்டளையிடும் நவகிரக நாயகியாகும். எனவே செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் உள்ளவர்கள் தரிசனம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் உடன் நடைபெறும். மூன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து வந்து அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை: அருள்மிகு பத்திரகாளியம்மனை வெள்ளிக்கிழமை வழிபட்டு வருவது மிகச்சிறப்பு. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மூன்று வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து வந்து அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் நினைத்த காரியம் கைகூடும். மேலும் தீராத நோய் உள்ளவர்கள், தாலி பாக்கியம் நிலைக்க வேண்டுபவர்கள், மன நலம் குன்றியவர்கள், கல்வி, தனம் வேண்டுபவர்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலையும் செவ்வரளி மாலையும் அணிவிப்பதால் பக்தர்களுக்குத் தங்கள் தீராத பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஞாயிற்று கிழமை: அருள்மிகு பத்திரகாளியம்மன் கிழக்கு நோக்கி சூரியனை நோக்கி நேருக்கு நேர் பார்த்தபடி ஒற்றைக்காலில் நின்றுள்ளதால் சூரியனின் அனைத்து கதிர்களையும் தன்னகத்துப் பெற்று அதிக உத்வேகத்துடன் அன்னை காளியம்மன் தோன்றுவதால் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் உச்சிகாலப் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவ்வாறு ஞாயிற்றுக் கிழமை உச்சிகாலப்பூஜையில் பத்திரகாளியம்மனை வணங்கி வரும் பக்தர்கள் வெற்றி பெறாது என நினைக்கும் கோர்ட் வழக்குகளில் வெற்றி பெறலாம். மாணவர்கள் தரிசனம் செய்தால் கல்வியில் அதிக மதிப்பெண் பெறலாம். குழந்தைப் பாக்கியம் இனி கிடைக்காது எனக் கைவிடப்பட்டவர்களுக்கும் குழந்தைப் பேறு கிடைக்கும். திருமணமே நடைபெறாது எனச் சொல்லப்பட்டவர்களுக்கும் அம்மனை தரிசித்தால் நல்ல வரன் கிடைக்கும். எனவே பக்தர்கள் ஞாயிற்றுக் கிழமையன்று தங்கள் குறைகளை அம்மனிடம் வேண்டினால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு இருந்து வருகிறது. அம்மனுக்கு நேர்த்திக்கடன்: இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துதலைப் பிரதானமாகக் கொண்டுள்ளனர். அசுர கோலத்துடன் இருக்கும் பத்திரகாளியம்மனைக் .குளிர்ச்சிப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழ மாலை அம்மனுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் பூஜிக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தினை பக்தர்கள் சாப்பிட்டால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். மேலும் ஒவ்வொரு நாளும் உச்சிகால பூஜையின்போது தேங்காய், பழத்துடன் சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியமாகச் சுவாமிக்குப் படைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அம்மனுக்கு பரிவட்ட சேலை சாற்றுதல், பூமாலை சாற்றுதல், ஏலக்காய் மாலை சாற்றுதல் போன்றவற்றை நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் திருக்கோயில் பிரகாரத்திலுள்ள மரத்தில் தொட்டில் கட்டுதல், கல்யாண வரம் வேண்டுபவர்கள் பிரகாரத்திலுள்ள மரத்தில் தாலிக்கயிறு கட்டுதல், குழந்தை வரம் பெற்றவர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி ஆபரணங்களையும், பணத்தையும் உண்டியலில் நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். மேலும் இத்திருக்கோயிலில் ஆடு, மாடு, கோழி, சேவல்களை உயிருடன் உபயமாக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் நவதானியங்களை இத்திருக்கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். மேலும் பக்தர்கள் தங்கள் வாழ்வு சிறக்க பித்தளை திருவிளக்கு மற்றும் பித்தளை மணிகளையும் நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர்.
அடைக்கலம் காத்த அய்யனார்
அருள்மிகு வீரபாத்திரசாமி சன்னதி அருள்மிகு அய்யனார் சுவாமி சன்னதிக்கு வலது புறத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு பேச்சியம்மன் காமாட்சியம்மன் சன்னதி அருள்மிகு அய்யனார் சுவாமி சன்னதிக்கு வலது புறத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு காணியாண்டவர் சன்னதி அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதிக்கு வலது புறத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு சின்னஅடைக்கன் சன்னதி அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதிக்கு எதிரே மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு முத்துக்கருப்பர்சாமி சன்னதி அருள்மிகு அய்யனார் சுவாமி சன்னதிக்கு வலது புறத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு கருப்பணசாமி சன்னதி அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதிக்கு வலது புறத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு சிற்பி சன்னதி அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதிக்கு எதிரே மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
விநாயகர் சன்னதி பத்திரகாளியம்மனுக்கு இடது புறத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு அரசப்பராஜா சன்னதி பத்திரகாளியம்மனுக்கு எதிரே மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
அருள்மிகு பத்திரகாளியம்மன் குதிரையின் நடுவில் நின்றகோலத்தில் இரு பக்கங்களிலும் பூதங்கள் அமையப்பெற்று கிழக்கு திசை நோக்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
தினசரி 100 நபர்களளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு நாள் வெள்ளிக் கிழமைகளில் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் 100 நபர்கள் (ஒரு நாள்) எனில் ரூ.3500/-யும், 200 நபர்கள் (வெள்ளிக் கிழமை) ரூ.7000/-யும், நிரந்தர அன்னதான கட்டளை முதலீடு ரூ.35,000/- (வருடத்தில் ஒரு நாள் கட்டளை முதலீடு மூலம் பெறப்படும் வட்டியின் மூலம் உபயதாரர் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) நன்கொடைகள் வழங்காலம். நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு 80ஜி பெற இயலும்.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதற்கு முடிக்காணிக்கை செலுத்தும் மண்டபம் திருக்கோயிலுக்கு எதிரே கிழக்கு வாசல் அருகே அமைந்துள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பின்படி பக்தர்களுக்குக் கையடக்கக் கணினி இயந்திரம் மூலம் கட்டணமில்லா முடிக்காணிக்கைச் செலுத்தும் சீட்டு வழங்கப்பட்டு முடிக்காணிக்கைச் செலுத்த வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நாளது தேதி வரை நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இரண்டு சக்கர நாற்காலிகள் திருக்கோயில் வளாகத்தில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் பக்தர்கள் சக்கர நாற்காலிகள் மூலம் சிரமமில்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு அம்மன் சன்னதிக்கு அருகே சாய்வுதளம் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (ஆர்.ஓ.) திருக்கோயில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு தற்போது வரை நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை ஆணையர் உத்தரவின்படி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் ரூ.2000/- செலுத்திக் கணினி வழி ரசீது பெற்றுக்கொண்டு திருக்கோயில் சுற்றுப்பிரகாரத்தில் தங்கத் தேர் உலா வர வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நல்ல முறையில் நாளது தேதி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் பக்தர்களுக்கு தங்கத்தேர் உலா திட்டத்திற்கு உட்பட்டு உபயதாரர் சன்மானமாக மாலை, தேங்காய், பழம், பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசாக எவர்சில்வர் வாளியும் வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயிலின் வடக்கு கோபுர வாசல் அருகில் கட்டணமில்லா காலனி பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு நாளது தேதி வரை நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருக்கோயிலுக்கு முடிக்காணிக்கை செலுத்த வரும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் குளித்து விட்டு உடை மாற்றுவதற்குத் தனித்தனியாக உடை மாற்றும் அறை வசதி திருக்கோயில் சார்பில் ஏற்படுத்தப்பட்டு நாளது தேதிவரை நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக நவீன கழிப்பறை வசதி இத்திருக்கோயிலின் மதிர்சுவருக்கு பின்புறம் உள்ள கிழக்கு வாசலில் இருந்து இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் 1384 சதுரஅடி பரப்பளவில் ஆண்களுக்கென 6 கழிப்பறைகளும், பெண்களுக்கென 8 கழிப்பறைகளும் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக நவீன குளியலறை இத்திருக்கோயிலின் மதிர்சுவருக்குப் பின்புறம் உள்ள கிழக்கு வாசலில் இருந்து இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் 1384 சதுரஅடி பரப்பளவில் ஆண்களுக்கென ஒரு குளியலறையும், பெண்களுக்கென 2 குளியலறைகளும் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.





