
Century
12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஐந்து நிலை விமானம்,
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்கள் வரலாறுகளின் புடைப்புச் சிற்பங்கள் சிறப்புடையனவாக காட்சியளிக்கின்றன. கருங்கல்லை சலவைக்கல்போல் செம்மைப்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அருள்மிகு அன்னபூரணி அம்மன் சிலை நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ளது. சுற்றுப்புற திருமால்பத்தியில் ஒரு கல்லினால் ஆன சாளரங்களை வடிவமைத்திருக்கும் திறன் மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகள் தேர் வடிவில் சக்கரங்களுடனும், குதிரைகளுடனும் கல்லால் செதுக்கி இருக்கும் திறன் அற்புதமாக அமைந்துள்ளது. இத்திருக்கோயிலை தரிசிக்க வரும் மேலை நாட்டினர் இச்சிற்பங்களின் கலை நுணுக்கத்தைக் கண்டு வியக்கின்றனர்.
இத்திருக்கோயிலின் எதிரில் உள்ள எமதீர்த்தம் என்ற திருக்குளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எமனுக்கு ஏற்பட்ட மேநோய் இக்குளத்தில் நீராடியதால் பூரணமாக நீங்கியது. தேவலோக ஐராவத யானை ஒரு சாபம் காரணமாக கருமை நிறம் பெற்று பின்னர் இத்திருக்குளத்தில் நீராடி சாபம் நீங்கி மீண்டும் வெண்மை நிறம் அடைந்தது என்பதும் ஒரு புராணச் செய்தியாகும்.
ஓவியங்கள்: ஐராவதீசுவரர் திருக்கோயில் மூலவர் கருவறையின் புறச்சுவர்கள், நடராச மண்டபத்து விதானங்கள் ஆகியவற்றில் தஞ்சை நாயக்க மன்னர்காலத்து ஓவியங்கள் உள்ளன. இவை கி. பி. 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த படைப்புகளாகும். இயற்கை மூலப்பொருள்கள், தாவர சாயங்கள் கொண்டு தீட்டப்பெற்ற இவ்வோவியப் படைப்புகளைப் பலர் அழித்துள்ளனர். வண்ண ஓவியங்கள் மீது ஆணிகொண்டு பெயர் எழுதி சிதைத்துள்ளமை வருத்தமளிக்கிறது. மான் மழு ஏந்திய சிவபெருமானின் திருவுருவங்கள், உமாதேவியின் வடிவம், இராமபிரான், அனுமன், எழிலார்ந்த பெண்கள், இசைக்கருவி வாசிப்போர். இருடிகள் எனப் பலரின் உருவங்கள் வண்ணப்பொலிவோடு காணப்பெறுகின்றன. ஓவியங்களில் காணப்பெறுகின்ற ஆடைகளில் பூவேலைப்பாடுகள் மிகுந்து காணப்பெறுகின்றன. பெண்களும், இறையுருவங்களும் குடியுள்ள அணிகலன்கள் மிக நுணுக்கமாகக் காட்டப்பெற்றுள்ளன. ஓவியப் பின்புலத்தில் பெரிய பெரிய வட்டப் பூ வடிவங்கள் ஆங்காங்கே காணப்பெறுகின்றன. விசயநகர காலத்து ஓவியத்தாக்கம் இங்கு மிகுதியாக உள்ளது. தஞ்சைப் பெரியகோயிலின் சாந்தார அறையில் தஞ்சை நாயக்கர் காலத்தில் தீட்டப்பெற்றுள்ள ஓவியங்களின் கூறுகளை இங்குக் காணமுடிகிறது.
இராஜகம்பீரன் மண்டபத்து கிழக்குச் சுவரில் அமைந்துள்ள கோஷ்டத்தில் பத்மநிதி சிற்பம் இடம்பெற்றுள்ளது. குறட்பூதமாக அமர்ந்துள்ள இவ்வுருவம் கையில் தாமரை மலரினை ஏந்தியுள்ளது. குபேரனின் ஒன்பது வகை நிதியங்களுள் பத்மநிதி ஒன்றாகும். இதனை அருளும் இத்தெய்வவடிவம் கோபுர வாயிலிலிருந்து உள்ளே நுழையும்போது இடதுபுறம் காணப்பெறுகின்றது.
இராஜகம்பீரன் திருமண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ள பத்மநிதி கோஷ்டத்தினை அடுத்துத் திகழும் கோஷ்டத்தில் அர்த்தநாரி சூரியனின் திருமேனி காணப்பெறுகின்றது. கோஷ்ட மாடத்திற்கு மேலாக செந்தூர எழுத்துக்களில் அர்த்தநாரி சூரியன் என்ற சோழர்காலப் பொறிப்பு காணப்பெறுகின்றது. ஒளி வட்டம் பின்புலத்தில் காட்சியளிக்க நான்கு திருமுகங்களோடு (ஒருமுகம் பின்புறம் மறைந்துள்ளது.) ஒருபாதி ஆணாகவும், ஒருபாதி பெண்ணாகவும் எட்டுத் திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் இத்திருவுருவம் உள்ளது. அக்கமாலை, பாசம், வாள், கேடயம், தாமரை, தண்டம், தாமரை, கபாலம் ஆகியவை எட்டுக்கரங்களிலும் உள்ளன.
இராசகம்பீரன் திருமண்டபத்தின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள தேவகோஷ்டத்தில் முதலாவதாகக் காணப்பெறுவது நாகராஜாவின் திருவுருவமாகும். ஐந்து தலைகள் உடைய பாம்பின் படம் விரிந்து திகழ மகுடமணிந்து இரு கரங்களையும் கூப்பியவராக மனித கோலத்தில் நின்ற நிலையில் இத்திருவுருவம் திகழ்கின்றது. பாதாள உலகின் கருதப்பெறும் நாகராஜா கோபுரவாயில்களிலும் திருச்சுற்றிலும் இடம்பெறுபவராவார். நல்ல கருப்பு வண்ண உயர்வகைக் கல்லில் இத்திருமேனி வடிக்கப்பெற்று காணப்பெறுகின்றது.
இராசகம்பீரன் திருமண்டபத்தின் தென்புறச்சுவரில் இரண்டாவதாகத் திகழும் கோஷ்டத்தில் அகத்தியரின் திருவுருவம் உள்ளது. சடாமுடி. நீண்டதாடி, மீசை ஆகியவற்றுடன், ஒருகாலை மடித்து ஒருகாலைத் தரையில் ஊன்றியவராய் குறுமுனி அமர்ந்துள்ளார். மார்பில் புரிநூலும், இடுப்பில் உதர பந்தமும் காணப்பெறுகின்றன. கீழாடை அழகிய மடிப்புக்களுடன் திகழ்கின்றது. வலக்கரத்தில் நீர்ச்சொம்பையும், இடக்கரத்தில் உருத்திராக்கமாலையும் ஏந்தியுள்ளார். கருப்பு வண்ண உயரிய கல்லில் இச்சிற்பம் அமைந்துள்ளது.
மகாமண்டபத்து கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ள சரபமூர்த்திக்கு பின்னாளில் தனி மண்டபமொன்றினைப் படிக்கட்டுகளுடன் அமைத்து சிற்றாலயமாக மாற்றியுள்ளனர். ஒரு கற்பலகையின் மேற்புறம் கொற்றக்குடை, இணை சாமரம், சூரிய சந்திரர் உருவங்களை அமைத்து அவற்றின்கீழ் வானமண்டலம் மேகங்களுடன் காட்டப்பெற்றுள்ளது. மேகமண்டலத்திற்குப் பின்புறம் தக்கன் உட்பட எட்டு ரிஷிகளும் தேவர்களும் தலைக்கு மேல் கைகூப்பி நிற்கின்றனர். சிம்ம உடல் எட்டுக்கரங்கள், விரிந்த சிறகுகள். சடாமகுடத்துடன் கூடிய சிம்ம முகம் ஆகியவற்றுடன் சரபதேவர் வானத்தில் பறந்து வருகிறார். அவர் உடலின் பக்கவாட்டில் ஒரு சிறுபகுதியே பின்புற கற்பலகையில் இணைந்துள்ளது. சரபம் எனும் சிம்புள் தன் பின் கால்களின் நகங்களால் எட்டுக்கரத்துடன் திகழும் நரசிம்மத்தின் வயிற்றைப் பற்றியவாறு மேலே பறந்து செல்கிறது. நரசிம்மமோ வலுவிழந்து தன் கரங்களில் பற்றியிருந்த சங்கு சக்கரங்களை கீழே நழுவவிட்டவாறு இரு கரங்களைத் தலைக்குமேல் உயர்த்தி, பறக்கும் சாபரை வணங்குகின்றது. கீழே பிரகலாதன் கைகூப்பித்தொழுகின்றான். நரசிங்கரின் உடலும் பக்கவாட்டில் பின்புலமாக அமைந்த கற்பலகையில் ஒட்டி நிற்கின்றது. அவர்தம் கால்கள் தனியே இடைவெளியோடு செதுக்கப்பெற்றுள்ளன. பின்புலம் தனியாகவும், செயலிழத்த நரசிங்கத்தை சரபம் வான மண்டலத்தில் தூக்கிச்செல்வது தனியாகவும் திகழுமாறு இப்படைப்பு விளங்குகின்றது. சரபமோ எத்தகைய சிரமமுமின்றி மிக லாவகமாக நரசிங்கத்தைத் தூக்கியவாறு பறக்கின்றது. நரசிங்கத்தின் வயிற்றில் சரபத்தின் நகங்கள் ஊடுருவி உடலைத்துளைத்து நிற்கின்றன. நரசிங்கத்தின் செயலிழந்த நிலையை அவர்தம் கரங்கள் காட்டி நிற்கின்றன. தலைகீழாக சங்கும் சக்கரமும் கீழ்நோக்கிச் செல்வதை வைத்து இக்காட்சியைக் காணும்போது சரபம் வானமண்டலத்தை நோக்கி நரசிங்கத்தைத் தூக்கிச் செல்வது தெரியும். மண்ணகத்திலிருந்து மேலே செல்ல சிறகுகள் தேவை என்பதை, சரபத்தின் உருவத்தாலும், மேகமண்டலம் கடந்து விண்வெளியில் மிதப்பது முடியும் என்பதை விண்ணில் நிற்கும் தேவர்கள் சூரிய சந்திரர் சிற்பங்களாலும் இவர்களைப் படைத்த சிற்பி நுட்பமாகக் காட்டியுள்ளான்.
அர்த்தமண்டபத்துடன் கூடிய ஸ்ரீவிமானத்தின் தென்புறச்சுவரில் புடைப்புச் சிற்பமாக கிராதார்ஜுனர் கதைக்காட்சி ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு பகுதிகளாக உள்ளது. அர்ஜுனன் தனக்குப் பாசுபதாஸ்திரம் வேண்டி இந்திர கீல மலை என்ற இடத்தில் கடுந்தவம் புரிந்தான். சிவபெருமான் அர்ச்சுனனைச் சோதிக்க தான் வேடுவ உருவம் பூண்டு அங்கு வந்தார். அப்போது பன்றி ஒன்று அர்ச்சுனன் இருக்குமிடம் வர அர்ச்சுனன் தன்னைக் காத்துக்கொள்ள அதன்மீது அம்பெய்தினான். அதே நேரத்தில் வேடுவன் உருவில் வந்த பெருமான், தானும் ஓர் அம்பை எய்யப் பன்றி இறந்தது. தானே கொன்றதாக அர்ச்சுனன் கூற. வேடுவன் வந்து தான் கொன்றது என்று கூற. இருவருக்கும் இடையே வேட்டையாடி போர் மூண்டது. கீழே உள்ள முதற்காட்சியில் அர்ச்சுனன் ஒரு காலால் நின்றுகொண்டு தலைக்கு மேல் கையுயர்த்தியவாறு கடுந்தவம் செய்கின்றான். அடுத்து கையில் வில்லும் அம்பும் கொண்டு நிற்கும் அர்ச்சுனனுடன் வாதம் செய்கிறான். இரண்டாம் காட்சியில் அர்ச்சுனனும் வேடுவனும் எதிரெதிர் நின்று விற்போர் புரிகின்றனர். மூன்றாவது காட்சியில் வேடுவன் வெற்றியடைய அர்ச்சுனன் தோற்றவாறு எதிரே வருகிறான். நான்காம் காட்சியில் விடைமீது சிவபெருமானும் உமாதேவியும் காட்சியருள அர்ச்சுனன் ஈசனை வணங்கி நிற்கிறான். குள்ளபூதமொன்று பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுக்க எடுத்து வருகின்றது.
ஸ்ரீவிமானத்தின் சுவரில் மகிஷாசுரமர்த்தினி கோஷ்டத்தினை அடுத்து சிவபெருமான் இராவணனுக்கு அருளும் புராணச் சிற்பக்காட்சி புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
இராசகம்பீரன் திருமண்டபத்தின் தென்புறச்சுவரில் மூன்றாவதாகத் திகழ்வது உபமன்னிய முனிவரின் திருவுருவமாகும். தலையில் சடாமுடி, நீண்ட தாடி, மீசை ஆகியவற்றுடன் பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். மார்பில் புரிநூலும் இடுப்பில் உதரபந்தமும் காணப் பெறுகின்றன. இடுப்பில் தரித்துள்ள ஆடை பல மடிப்புக்களுடன் திகழ்கின்றது. ஒருகரத்தில் சுவடியும் ஒருகரத்தில் உருத்திராக்க மணிமாலையும் கொண்டு ஞானமுரைக்கும் கோலத்தில் காணப் பெறுகின்றார்.
தலையில் சுவாலைப் பிழம்புகளுடன் கீரீட மகுடம், தாடி. மீசைகளுடன் நான்கு திருமுகங்கள், அவற்றில் கோபக்கனல் எழும் பிதுக்கம் பெற்ற விழிகள், நான்கு திருக்கரங்கள் - வலமுன்கரம் சூலத்தை உயர்த்திக் குத்தும் பாவனையிலும், இடமுன்கரம் கட்வாங்கம் எலும்பைப் பிடித்த நிலையிலும், வலப்பின்கரம் வாளை ஓங்கியும், இடப்பின்கரம் உலக்கையைத் தூக்கிப்பிடித்தும் திகழ்கின்றன. வலக்காலை உயர்த்தி இடக்காலைத் தரையில் இருத்தி ஆடும் கோலம் காட்டுகின்றார். கணுக்கால்களுக்கு மேலாக இரண்டு பாம்புகள் கழல்களாக அணிசெய்கின்றன. இடுப்பாடையில் இருபாம்புகள் இடம்பெற்று படமெடுத்தாடுகின்றன. வயிற்றில் உதரபந்தமாக ஒருநாகம் சுற்றியுள்ளது. மார்பிலோ புரிநூலாக ஒருநாகம் முடியப்பெற்றுள்ளது. நான்கு புஜங்களிலும் நான்கு நாகங்கள் படமெடுத்தவாறு திகழ்கின்றன. நான்கு திசைகளை நோக்கும் நான்கு முகங்களுக்குரிய காதுகளில் நான்கு பாம்புகள் காதணிகளாக இலங்குகின்றன. மொத்தத்தில் பதினான்கு பாம்புகள் இத்திருமேனியை அலங்கரித்து நிற்கின்றன. ஆனந்தத் தாண்டவத்தின் போது ஒரு பாம்போடும், அட்டபுஜங்க ஆடலின் போது எட்டு
இராசகம்பீரன் திருமண்டபத்துத் தென்புறச் சுவரில் உபமன்னிய ரிஷியின் கோஷ்டத்தினை அடுத்துள்ள கோஷ்டத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்தவராக நான்கு திருக்கரங்களுடன் அகோரமூர்த்தியின் திருவடிவம் காணப்பெறுகின்றது. ஜுவாலா மகுடம், பிறைச் சந்திரன், கபாலம் ஆகியவை அணிசெய்ய நெற்றிக் கண்ணுடன் இம்மூர்த்தி திகழ்கின்றார். முன்கரங்களில் வாளும் கேடயமும் திகழ பின்கரங்களில் வில்லும், அம்பும் காணப்பெறுகின்றன. கழுத்தணிகள், மார்பில் புரிநூல். இடுப்பில் உதரபந்தம். இடுப்பாடை திகழ கோபம் காட்டும் கண்களுடன் இத்திருமேனி திகழ்கின்றது.
பொது நன்கொடை
நஞ்சை, புஞ்சை, கட்டிடம், மனை, ஏலங்கள்
உண்டியல் திறப்பு மூலம் வரவு, இ-பூஜை நன்கொடை
அர்ச்சனை, அன்னை தமிழ் அர்ச்சனை, அபிஷேகம், இருசக்கர வாகனம், கார், வேன், மினி பஸ், சுற்றுலா பேருந்து
பெண்கள் - 2, ஆண்கள் - 2
இருசக்கர வாகனம் - ரூ.5/- கார் - ரூ.10/- மினி பஸ்/வேன் - ரூ.30/- பஸ் - ரூ.50/-





