Home/Temples/TN/Thanjavur/Arulmigu Pragadheeswarar Temple, Thanjavur - 613001
Heritage Templehrce

Arulmigu Pragadheeswarar Temple, Thanjavur - 613001

அருள்மிகு பிரகதீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

🕉️ ஶ்ரீ பிரகதீஸ்வரர் Thanjavur, TN
Arulmigu Pragadheeswarar Temple, Thanjavur - 613001 — image 1
1 / 16
Also known as:ஶ்ரீ பெருவுடையார் திருக்கோயில்

History & Architecture

Century

10th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

கருவூர் தேவர்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

கஜமுக விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வன்னி மரம்

Pooja Timings

காலசந்தி பூஜை (வழக்கமான அலங்காரம்)07:30 AM to 08:30 AM IST
உச்சிக்கால பூஜை (வழக்கமான அலங்காரம்)12:30 PM to 01:00 PM IST
சாயரட்சை பூஜை (வழக்கமான பூஜை அலங்காரம்)05:30 PM to 06:30 PM IST
அர்த்தஜாம பூஜை (வழக்கமான அலங்காரம்)08:00 PM to 09:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

உலகிற்கே ஆன்மீகக் கருத்துக்களையும், பண்பியல் சிந்தனைகளையும் வாரி வழங்கிவரும் இந்தியத் திருநாட்டின் நம்பகுதியாம் தமிழ்நாட்டில், காவிரி பாய்ந்து கழனி வளம் பெருக்கும் தஞ்சை மண்டலத்தை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலான ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவர்கள், புகழ்மிக்க பாரம்பரியம் உடைய சோழ அரச மரபினர். அவர்களின் முதல் நானூறு ஆண்டுகால ஆட்சிச் சிறப்புகளைச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. தஞ்சைச் சோழ அரச பரம்பரையில் சுந்தர சோழனுக்கும் வானவன் மாதேவி என்பவருக்கும் ஓர் ஐப்பசித் திங்கள் சதய நட்சத்திரத்தில் இளைய மகனாக பிறந்தவர் இராசராசன். இவர் இராஜகேசரி என்ற பட்ட பெயருடன் நாற்பத்து இரண்டு சிறப்புப் பெயர்களையும் பெற்றவர். தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தவன். தன் வீரத்தால் மாபெரும் நிலப்பரப்பை வென்று ஆண்ட தமிழ்வேந்தன். அருண்மொழிவர்மன் என்ற இயற்பெயருடைய மாமன்னனாம் இந்த இராசராசன் கி.பி.985-ஆம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்தான். இராசராசனின் தமையனான ஆதித்த கரிகாலன் என்பான், சுந்தர சோழன் இறப்பதற்கு முன்பாகவே அகால மரணமடைந்தான். இராசராசனின் அன்புத் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார். இராசராசனுடைய பட்டத்து அரசி லோகமாதேவி ஆவார். இவன் மகனான விக்ரமச் சோழன் எனப்பட்ட இராசேந்திரனுடன் கி.பி.1012 முதல் கி.பி.1014 வரை இணைந்தும் ஆட்சி புரிந்துள்ளான். தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளில் உள்ளவாறு சோழமன்னன் இராசராசன், தன்னுடைய வீரமிக்க புதல்வனும் சேனாதிபதியுமான, இராசேந்திரனின் தோள் வலிமையினால், காந்தளூர்ச் சாலை, வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி, கலிங்கம், ஈழ மண்டலம், இரட்டபாடி, பழந்தீவு ஆகிய நாடுகளையும் வென்றான். பாண்டிய நாட்டை வென்று மும்முடிச் சோழனாகவும் பரிணமித்தான். இவனது ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலாகச் (கி.பி.1001) சோழப் பேரரசுக்குட்பட்ட நிலப்பகுதி முழுமையும் அளக்கப்பட்டது. தேவாரப் பதிகங்கள் சிலாலயங்களில் தினமும் ஓதப்பட்டன. வெற்றி கொண்ட நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. சீரான நிருவாகம் நடத்திட மிகச் சிறந்த உள்ளாட்சி முறையும் கடைபிடிக்கப்பட்டது. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு இடையே அரசு அதிகாரங்கள் மிக அதிக அளவில் பகிர்ந்து அளிக்கப்பட்டன. எல்லா சமயக் கோட்பாடுகளுக்கும் ஊக்கமும், ஆக்கமும், அரச ஆதரவும் அளிக்கப்பட்டன. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் மிக உயர்ந்த பண்பாட்டுடன் கூடிய சமுதாய மரபுகளைப் பேணிக் காத்தனர் என்பதை எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரிவித்திடவே மாமன்னன் இராசராசன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோயிலைக் கட்டி, அதனில் தமது நெஞ்சில் குடியிருந்த ஆடல்வல்லானாகிய பேரருட்கடவுளை நிறுவினான். அவன் பெருமளவில் திட்டமிட்டுப் புதுமையாக கி.பி.1010-இல் இக்கோயிலைக் கட்டி, வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டிடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய பல்கலைகளுடன் சமுதாயம், பண்பியல் மற்றும் இறைக் கொள்கை ஆகியவற்றை நமக்கு எடுத்தியம்பியுள்ளான். உலக வரலாறு ஒரு சிலரை மட்டுமே மாமனிதர்கள் என்றும் மாமன்னர்கள் என்றும் நமக்குக் காட்டுகிறது. அவர்களில் முதல்நிலை வகிக்கும் மும்முடிச்சோழனின் முத்தமிழ்க் கற்றளியாம் தமிழர்களின் மாண்பினைக் கூறும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வருக வருக என அனைவரையும் வரவேற்கிறோம்.

Wall Paintings

ஓவியங்கள்

ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு காலக்கட்டங்களில் தீட்டப்பெற்ற ஓவியக்காட்சிகளின் உறைவிடமாகத் தஞ்சைப் பெருங்கோயில் திகழ்கின்றது. இராசராச சோழனின் ஓவியர்கள் தீட்டிய ப்ரஸ்கோ வகை ஓவியங்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில் தஞ்சை நாயக்கர்களால் தீட்டப்பெற்ற சுவரோவியங்கள், மராட்டியர் காலத்தில் தீட்டப்பெற்ற விதானம் மற்றும் சுவரோவியங்கள், ஆங்கிலேயர்களின் வரவுக்குப் பிறகு தஞ்சை மராட்டியர் ஆட்சி காலத்தில் தீட்டப்பெற்ற ஓவியங்கள் எனப் பலவகையான ஓவியங்கள் இங்குக் காட்சி அளிக்கின்றன. சோழர் ஓவியங்கள்: பெருவுடையார் திகழும் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள சாந்தார அறையில் மாமன்னன் இராசராச சோழன் காலத்து ஓவியங்கள் உள்ளன. இங்கு நாம் காணும் சோழர் கால சுவரோவியங்கள் 10-ஆம் நூற்றாண்டில் உருவான ஓவியக்கலையின் உச்சங்கள் ஆகும். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்த அகத்தியர், சுந்தரர் திருமணம் தடுத்தாட் கொள்ளல், தில்லை கோயிலின் பொற்சபையில் நடராசரை வழிபடும் இராசராசனும் அவனது தேவியர்களும், திரிபுர அசுரர்களுடன் போரிடச்செல்லும் திரிபுராந்தகர். நாயக்கர்கால ஓவியங்கள்: இதே சாந்தார அறையில் சோழர் கால ஓவியங்கள் மேல் தீட்டப்பெற்ற நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றை பெத்ரால் ராமய்யா என்பவர் தீட்டினார் என்பதை தெலுங்கு மொழியில் எழுதப்பெற்ற குறிப்பால் அறியலாம். இங்கு சிவபுராணங்களை சமுத்திரமதனம், திரிபுராந்தகர், இலக்குமி போன்ற காட்சி படைப்புகள் உள்ளன. மராட்டியர் கால ஓவியங்கள் அம்மன் மண்டப விதான ஓவியங்கள்: அம்மன் திருக்கோயிலின் முன் மண்டபத்து விதானம் முழுதும் காட்சி விளக்கங்கள் எழுதப்பெற்ற குறிப்புகளோடு ஓவியங்கள் உள்ளன. இங்கு தேவி மகாத்மியம் முழுதும் காட்சிகளாக தீட்டப்பெற்றுள்ளன. சும்ப நிசும்ப வதம், மகிஷவதம், ரக்தபீஜன்வதம் ஆகிய புராண வரலாறுகளும் தட்சயாகம், தெய்வத் திருமணக்காட்சிகள் ஆகியவைகளும் ஓவியங்களாக காணப்பெறுகின்றன. திருச்சுற்று மண்டப ஓவியங்கள் திருச்சுற்று மாளிகையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளின் சுவற்றில் திருவிளையாடல் புராணத்தின் 64 புராண வரலாறுகளும் காட்சி அனைவருக்கும் விளங்கும் வகையில் எளிமையான தமிழில் விளக்கக்குறிப்புகளுடன் வண்ண ஓவியங்களாக தீட்டப்பெற்றுள்ளன. இவற்றோடு சிவபெருமான், கணபதி, முருகன், இலக்குமி, சரஸ்வதி ஆகிய தெய்வ உருவங்களும் ஓவியங்களாக காணப்பெறுகின்றன. மல்லப்ப நாயக்கர் மண்டபத்து ஓவியங்கள் முருகன் ஆலயத்திற்கு முன்புள்ள மண்டபமே மல்லப்ப நாயக்கர் மண்டபம் ஆகும். இம்மண்டபத்தின் உட்புற சுவர்களில் மல்லுக செட்டிகள், சிப்பாய்கள், நாட்டிய பெண்கள் ஆகியோர் உருவ ஓவியங்களோடு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர்களின் பெரிய அளவிலான உருவ ஓவிங்களும் காட்சி நல்குகின்றன. நந்தி மண்டபத்து விதானத்தில் பல்வேறு வகையான பூக்களும், பறவைகளும் ஓவியங்களாக காட்சி நல்குகின்றன. இவ்வோவியங்கல் ஆங்கிலேயர் ஓவியப் பாணியின் வரையப்பட்டவை ஆகும்.

Sculptures

சோழர் காலத்து சிற்பங்கள்

தஞ்சைப் பெரிய கோயிலின் இரண்டாம் இராஜகோபுரமான இராஜராஜன் திருவாயிலும், தட்சிணமேரு என அழைக்கப்பெறும் ஸ்ரீ விமானமும், நாயக்கர்கால கோயிலான முருகன் ஆலயமும் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் பொதிந்த கருவூலங்களாக விளங்குகின்றன. இரண்டாம் இராஜகோபுரத்தின் அடித்தளமாக விளங்கும் உபபீடப்பகுதியில் சண்டீசர் வரலாற்றுத் தொகுப்பு, மார்கண்டேய புராணக்காட்சிகள், சிவபெருமான் திருமணக்காட்சி, முருகப்பெருமானின் வள்ளித் திருமணக்காட்சி, கிராதார்ஜீன ராக சிவபெருமான் அர்சுனனுடன் போர் புரிதல், பின்பு அவனுக்கு அருளுதல் ஆகிய காட்சிகள், பெருமான் தேவியுடன் அமர்ந்திருக்க கங்கை, யமுனை ஆகிய பெண்கள் சாமரம் வீசும் காட்சி மலர் அமைப்பு தொடுத்த காமன் எரிந்து விழும் காட்சி, கண்ணப்பர் வரலாறு ஆகியவை கீழ்ப்புறம் உள்ளன. இதே கோபுரத்தின் உட்புறம் உபபீடப்பகுதியில் திரிபுரதகனக்காட்சி மிகப்பெரிய சிற்பத்தொகுப்பாகக் காட்சி அளிக்கின்றது. இதில் சிவபெருமான் விடையேறி போரிட செல்லும் காட்சி, திருமால் புத்தராகத் திரிபுர அசுரர்களுக்குப் போதனை செய்யும் காட்சி, சுந்தரரும் சேரமானும் யானை மீதும் குதிரை மீதும் ஏறி கயிலை செல்லும் காட்சி, விடை மீது அமர்ந்து பூதங்கள் சூழ சிவபெருமான் பிச்சை ஏற்று உண்ணும் காட்சி ஆகியவை பேரழகோடு விளங்குகின்றன. இக்கோபுரத்தில் இடம் பெற்றுள்ள 18 அடி உயரமுடைய இரண்டு துவார பாலகர் சிற்பங்கள் பிரமாண்டமுடையவனவாய்த் திகழ்கின்றன. ஸ்ரீ விமானத்தின் பக்கவாட்டுப் படிக்கட்டுக்கள், தேவ கோஷ்டங்கள், திருமண்டபத்து கோஷ்டங்கள், தூண்கள், மேற்தளத்துக் கோஷ்டங்கள், ஸ்ரீ விமானத்து மேல் நிலைகள் என பல்வேறு இடங்களில் எழிலார் சிற்பங்களும், காட்சித் தொகுப்புக்களும் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீ விமானத்து தென்புறப்படிக்கட்டின் பக்கவாட்டுச்சுவரின் கிழக்குப்பகுதியில் சிவபெருமானின் திருமணக்காட்சியும் திரிபுரத்தை எரிக்கும் காட்சியும் காணப்பெறுகின்றன. திரபுரதகன காட்சித் தொகுப்பில் திருமால் புத்தராக தோன்றுதல், முப்புர அசுரர்களின் பறக்கும் கோட்டைகள், பயந்து ஓடும் தேவர்கள், சிவபெருமான் தேரேறி போர்புரியச் செல்லுதல், திரிபுரங்கள் எரிந்து சாம்பலாதல் ஆகிய காட்சிகள் உள்ளன. இதே படிக்கட்டுகளின் மேற்குப்பகுதிச் சுவரில் காமனை எரிக்கும் சிவபெருமான், பகீரதனின் தவத்திற்காக கங்கையை சடையில் ஏற்கும் சிவபெருமான் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ விமானத்து வடபுறப் படிக்கட்டின் மேற்குப் பகுதியில் சிவன், திருமால், பிரமன் ஆகிய முப்பெருங் கடவுளரும் தேவர்கள் போற்றக் காட்சி தருதல், தக்கன் வேள்வியை வீரபத்திரர் தகர்த்து, அவன் தலையை வெட்டி யாகத்தீயில் இடுதல் ஆகிய காட்சித் தொகுப்புக்கள் உள்ளன. இதே படிக்கட்டின் கீழ்ப்புறச் சுவரில் கிராத வேடத்தில் சிவபெருமான் அர்ச்சுனனுடன் விற்போர் செய்தல், பின் அவனுக்குப் பாசுபதம் கொடுத்தல், விசாரசருமன் பால் கறந்து சிவபூசை செய்தல், தடுத்த தந்தையின் கால்களை வெட்டுதல், பின் ஈசனார் அங்கு தோன்றி சண்டீசப்பெரும்பதம் அருளல் ஆகிய காட்சிகள் காணப்பெறுகின்றன. கந்த கோட்டம் எனப்பெறும் முருகன் ஆலயம் செவ்வப்ப நாயக்கரால் தோற்றுவிக்கப் பெற்றதாகும். இம்மண்டபம் ஒரு நுண்கலைப் பெட்டகமாகவே விளங்குகின்றது. கபோதகக்கூடுகளில் 52 வகையான முருகனின் திருவுறுவங்கள் இடம் பெற்றுள்ளன. கோஷ்டங்களிலும், பித்தி எனப்பெறும் சுவரிலும் அரிய சிற்பக்காட்சிகள் உள்ளன. படிக்கட்டுகளில் உள்ள யானை உருவங்களும், குதிரைகளும் பேரழகு வாய்ந்தவையாகும். அர்த்தமண்டப வாயிலில் உள்ள வஜ்ரதேவர், சக்திதேவர் ஆகிய துவாரபாலகர் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இராசராசன் திருவாயிலில் உள்ள மிகப்பெரும் துவாரபாலகர் சிற்பங்களும், முகமண்டபம், அர்த்தமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள துவார பாலகர் சிற்பங்களும் மிகவும் கலை நயம் வாய்ந்தவையாகும். ஸ்ரீவிமானத்தின் ஐந்து வாயில்களைக் காத்து நிற்கும் பத்து துவார பாலகர்களும் முறையே சிவபெருமானின் தசாயுதமூர்த்திகளான சூலதேவர், பரசுதேவர், சக்கரதேவர், சக்திதேவர், வஜ்ரதேவர், கதைதேவர், கட்கதேவர், துவஜதேவர், பாசதேவர், என்போராவர். இவற்றுள் ஐந்து திருமேனிகளே பழமை நயம் குன்றாமல் உள்ளன. மீதமுள்ள ஐந்து மூர்த்திகளின் கரங்களை கலை அறிவற்றோர் பின்னாளில் சிதைத்துவிட்டனர். தற்போது அவை சுதையால் சீர் பெற்றுக்காணப்பெறுகின்றன. யானையை விழுங்கும் பாம்பு: கிழக்கு இரண்டாம் இராஜபோபுரத்திலும், மகாமண்டபத்து வாயிலிலும் உள்ள துவாரபாலகர் சிற்பங்களின் காலடியில் ஒரு பாம்பு யானையை விழுங்கும் காட்சியோடு திகழ்கின்றன. துவார பாலகரோ ஒரு கரத்தை கதையின் மீது இருத்திட, ஒரு கரத்தால் தர்ஜனி என்றும் எச்சரிக்கை முத்திரைகாட்டி, மேலிரு கரங்களில் ஒன்றால் உள்ளே ஈசன் இருக்கும் திசையைக்காட்டுவதோடு மறுகரத்தை தலைக்குமேல் உயர்த்தி பெருவியப்பைச்சுட்டிடும் விஸ்மயம் என்னும் முத்திரையைக்காட்டுகின்றனர். இச்சிற்பத்திற்கு முன் நின்றுகொண்டு அங்குக் காணும் உண்மையான யானையின் அளவாகக் கொண்டு அதே விகிதத்தில் அச்சிற்பத்தினை நோக்குவோமாயின் துவார பாலகரோ வானத்தளவு நம் கற்பனையில் தோன்றுவார். அவர் ஸ்ரீவிமானத்தின் உள்ளே உள்ள ஈசனைச்சுட்டி விஸ்மயம் என்றும் பெருவியப்பைக் காட்டும்போது அங்கே பிரபஞ்சமே ஈசனாக இருப்பதை நாம் உணர்வோம். திருஞானசம்பந்தர் தம் கயிலைப் பதிகத்தில் புரிகொள்சடையார் அடியார்க்கெளியார் கிளி சேர்மொழி மங்கை தெரியயுருவில் வைத்த கந்த தேவர் பெருமானார் பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கரியமிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே என்று கூறும் காட்சியின் வெளிப்பாடுதான் இச்சிற்பம் என்பதை நாம் உணரலாம். நாட்டியக்கரணச் சிற்பங்கள்: கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரம் என்னும் அறைக்கு மேலாக மற்றுமொரு சுற்று அறை உள்ளது. இதன் உள்சுவரில் நாட்டியக்கலையின் அடிப்படையாக விளங்கும் 108 கரணங்களை விளக்கும் 81 கரணச்சிற்பங்கள் உள்ளன. மீதமுள்ள 27 சிற்பங்களின் பணி முடிக்கபெறாமல் சிற்பங்களுக்கான பாறைகள் மட்டுமே பதிக்கப்பெற்றுள்ளன. தல புஷ்பபுடம் எனும் கரணத்தில் தொடங்கி சர்பிதம் என்னும் கரணம் வரை சிவபெருமானே ஒவ்வொரு கரணத்தையும் ஆடிக்காட்டுவதாக சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு கரணத்தின் ஆடல் நிலையில் ஒரு குறிப்பிட்ட காட்சியின் உறைநிலையே இங்கு சிற்ப வடிவமாக காட்டப்பட்டுள்ளது. வராகி: இவ்வாலயத்துத் தெற்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ள பரிவாராலயம் ஒன்றில் முன்னர் சப்தமாதர் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னாளில் ஏற்பட்ட படையெடுப்புகளின்போது அவற்றுள் வாராகி தவிர மற்ற திருமேனிகளை முற்றிலுமாக அழித்து விட்டனர். தென் பிரகாரத்தில் புதையுண்டு திகழ்ந்த வராகி அம்மன் திருமேனியை தற்போது தனித்த சிற்றாலயம் ஒன்றில் பிரதிட்டை செய்துள்ளனர். அட்டநாகங்கள்: திருச்சுற்று மாளிகையில் வடகிழக்குப்பகுதியில் அட்டநாகங்களின் திருமேனிகள் (ஒன்று நீங்கலாக) தற்போது காணப்பெறுகின்றன. இவை இடுப்பிற்கு மேல் மனித உருவும், இடுப்பிற்கு கீழ் பாம்புடலும் உள்ள திருமேனிகளாக காணப்பெற்றாலும் தலைக்குமேல் படம் விரிந்த நிலையில் காணப்பெறுகின்றது

Services

நன்கொடை

பொது நன்கொடை

Immovable Property

நஞ்சை, புஞ்சை, கட்டிடம், மனை

ரசீது சேவை

உண்டியல் திறப்பு மூலம் வரவு, இ-பூசை நன்கொடை

Temple Services

அர்ச்சனை, அன்னை தமிழ் அர்ச்சனை, புத்தகங்கள் விற்பனை, காலண்டர் விற்பனை, கார், வேன், பஸ்

Facilities

சக்கர நாற்காலி

நடராஜர் சன்னதி மேற்கு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிக்கு அருகில் சக்கர நாற்காலி வசதி உள்ளது.

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம்

கேரளாந்தகன் திருவாயிலிருந்து இராசராசன் திருவாயில் செல்வதற்கு இடையில் கேரளாந்தகன் திருவாயில் வலது புறம் தொல்லியத்துறை கட்டுப்பாட்டில் கட்டணம் செலுத்தி காலணிகளை பாதுகாக்கும் இடம் அமைந்துள்ளது. பாதுகாக்க கட்டணம் ரூ.3/-

பொருட்கள் பாதுகாக்கும் அறை

கேரளாந்தகன் திருவாயிலிலிருந்து இராசராசன் திருவாயில் செல்வதற்கு இடையில் கேரளாந்தகன் திருவாயில் வலது புறம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. பொருட்கள் பாதுகாக்க கட்டணம் ரூ.20/-

வாகன நிறுத்தம்

திருக்கோயிலின் எதிர்புறம் வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது.

கழிவறை வசதி

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமப்பில் இத்திருக்கோயில் உள்ளது. திருக்கோயிலின் நுழைவில் உள்ள அகழலிக்கு அடுத்தாற்போல் வலது புறத்தில் உள்ள இடத்தில் கழிப்பறை உள்ளது. மேலும் திருக்கோயிலின் முன்புறம் சாலைக்கு கிழக்கு புறத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கழிப்பறை உள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் மத்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் முதலாவதாக அமைந்துள்ள இராஜகோபுரத்தின் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி பக்தர்களின் வசதிக்காக உள்ளது.

More Temples Nearby

View all →