
Century
18th நூற்றாண்டு
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Poet Saint
நக்கீரர்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
நெல்லி மரம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இத்தலம் நான்காம்படை வீடாகும். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப்பெற்ற ஸ்தலமாகும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்த தலமாகும். அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிகளாக அமையப்பெற்றது. ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் திருப்படி திருவிழா நடைபெறும் சிறப்புமிக்க தலமாகும்.
திருப்படி பூஜை தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது. மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்தச் சுவாமிமலை உள்ளது. குன்றுதோறும் இருப்பான் முருகக்கடவுள் என்பதற்கிணங்க இம்மலைமீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பான ஒன்றாகும். இக்கோயிலின் மேல்தளத்தை அடைய 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை சபரிமலையில் 18 படிக்கட்டுகள் எப்படிப் புனிதமாகக் கருதப்படுகிறதோ அதுபோல் புனிதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடங்கள் 60 ஆகும். அந்தத் தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியைப் பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம். ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினங்களின் போதும் இந்தப் படிகளுக்கு வஸ்திரம் சாத்தி தேங்காய் பழம் வைத்துப் பாடல்பாடி பூஜை செய்வார்கள். இதற்குத் திருப்படி பூஜை என்று பெயர். இது இத்தலத்தின் விஷேசம் ஆகும்.
நேர்த்திகடன் மொட்டை போடுதல், சுவாமிக்குச் சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திக் கடனாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காகப் பொருள் தருவது வழக்கமாக உள்ளது.
திருவிழா திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள். இத்திருவிழாவே இத்திருத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும். இத்திருவிழாவின்போது இலட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சித்திரை பிரம்மோற்சவம் 10 நாட்கள், வைகாசி விசாகம் பெருவிழா, ஆவணி பவித்ரோற்சவம் 10 நாட்கள், புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், கந்தசஷ்டி பெருவிழா 10 நாட்கள் மார்கழி திருவாதிரை திருநாள், தைப்பூச திருவிழா 10 நாட்கள், பங்குனி உத்திரம் வள்ளி திருக்கல்யாணம் திருவிழா 10 நாட்கள் இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் நடைபெறும் திருவிழாக்கள் ஆகும். இவை தவிர மாதாந்திர கிருத்திகை, பௌர்ணமி, சஷ்டி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட விஷேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.
இத்திருக்குளம் திருக்கோயிலின் கிழக்கே அமைந்துள்ளது. இத்திருக்குளத்தில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
இது சித்திரக்கவியாகும். தேர் வடிவில் இது அமைந்துள்ளதால் இதனை ரதபந்தம் என்பர். அருணகிரிநாதசுவாமிகள் சுவாமிநாதப்பெருமாள் மீது பாடியுள்ள இப்பாடல் திருப்புகழின் சாரம் என்று போற்றப்படும். சுவாமிமலை திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரம் படியின் எதிர்புறம் உள்ள சுவரில் தேர்வடிவிலேயே இதனைச் சலவைக்கல்லில் வடித்துப்பதிக்கப் பெற்றுள்ளதைக் காணலாம். ஒன்றிலிருந்து ஏழுவரை எண் கூடியும் குறைந்தும் வரும் நயம் இதில் குறிப்பிடத்தக்கது. தொண்ணூற்றாறு வகைத் தமிழ்ப் பிரபந்தங்களுள் ஒன்றான எழுகூற்றிருக்கை நம் சுவாமிநாதனுக்கு அமைந்த அற்புதமான திருத்தேராக செந்தமிழில் விளங்குகிறது.
மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்பு கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம் தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான். கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார்.
சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே அறியாதவர் அல்ல. பிருகு முனிவர் ஈசனை வேண்டி தான் ஜீவன் முக்தனாக வேண்டிய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார்.
ஸ்ரீ முருகப்பெருமானை மணம் முடிக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்தாள் ஸ்ரீ வள்ளி. அவளுக்கு முருகப்பெருமான் அளித்த வரம் காரணமாக வள்ளி மலை என்ற பகுதியில் வேடர் குலத்தில் உதித்து ஸ்ரீ வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். வேடர் குல வழக்கப்படி பெண்கள் மலைப்பகுதியில் உள்ள தினைப்புனத்தை குறிப்பிட்ட நாட்கள் காவல் காக்க வேண்டும். அதன்படி வள்ளியும் தினைப்புனத்தை காவல் காப்பதற்காக சென்றாள். அங்கு ஸ்ரீ வள்ளியைத் தேடி வேடர் உருவில் வந்த ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளியிடம் காதல் மொழி பேசும்போது, வள்ளியின் தந்தையான நம்பிராசன், வேடவர்கள் புடைசூழ அங்கு வந்து கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததும் ஸ்ரீ முருகப்பெருமான் வேங்கை மரமாக உருமாறி மறைந்து நின்றார். மகளைப் பார்த்து விட்டு நம்பிராசனும், வேடவர்களும் அங்கிருந்து சென்ற பின்னர் வேங்கை மரமாக நின்றிருந்த ஸ்ரீ முருகப்பெருமான் மீண்டும் வேடனாக மாறி வள்ளியிடம் காதல் மொழி பேச, எச்சரித்தாள் வள்ளி. மறுமுறை முதியவர் வேடத்தில் வந்தார் ஸ்ரீ முருகப்பெருமான். மிகவும் பசியாக இருப்பதாக கூறிய அவர், சாப்பிட ஏதாவது தருமாறு வள்ளியிடம் கேட்டார். இரக்கம் கொண்ட ஸ்ரீ வள்ளி, தினை மாவும், தேனும் கலந்து முதியவருக்கு கொடுத்தாள். அதனை உண்டு முடித்தவர், &lsquoதாகமாக உள்ளது தண்ணீர் பருக வேண்டும்’ என்றார். அவரை அங்கிருந்த சுனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று நீர் பருக வைத்தாள். உன்னால் என்னுடைய பசியும் தாகமும் தீர்ந்து விட்டது. ஆனால் இப்போது காதல் மோகம் தலைதூக்கி விட்டது. என்னை நீ மணம் புரிந்து கொண்டால் உன்னை நான் உலகம் போற்றி, துதிக்கும் வகையில் உயர்த்துவேன்’ என்றார் முதியவர். இந்த வார்த்தையைக் கேட்டதும் கோபத்தில் கொந்தளித்தாள் வள்ளி. எப்படியும் ஸ்ரீ வள்ளியை திருமணம் செய்ய வேண்டி தன் அண்ணனான ஆணைமுகனிடம் உதவியை நாடினார் ஸ்ரீ முருகப்பெருமான். தம்பியின் காதலுக்காக ஆணைமுகன், யானையாக மாறி வள்ளியை நோக்கி ஓடி வந்தார். யானையைப் பார்த்ததும் அஞ்சி நடுங்கிய வள்ளி, முதியவரை நோக்கி ஓடிப்போய் அவரது நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள். அதைப் பார்த்ததும் யானை அங்கிருந்து ஓடி காட்டிற்குள் மறைந்தது. மிரளும் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ முருகப்பெருமானிடம் அணைவதும் பின் ஸ்ரீ பெருமான் சுயரூபம் காட்டியதும், நம்பிராஜன், கோலாகலத்துடன் ஸ்ரீ வள்ளி திருமணத்தை முடித்து வைத்து ஸ்ரீ முருகப்பெருமானுடன் ஸ்ரீ வள்ளியை அனுப்பி வைத்ததாகவும் சிறப்புமிக்க புராண வரலாறு கூறுகின்றது.
அன்னதானம் நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது . வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் மற்றும் மாதாந்திர கிருத்திகை தினத்திலும் அன்னதானத்துடன் வடை மற்றும் பாயசம் சேர்த்து வழங்கப்படுகிறது . அன்னதானம் செய்ய விரும்புவோர் .... 1.அன்னதானம் நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு வழங்கிட ரூ.3500/- 2.நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.85000/- (வருடத்திற்கு ஒருமுறை தாங்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) 3.அன்னதானம் வங்கி கணக்கு எண். 021701000016194 : : : 0000217 4. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாக திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் .
இத்திருக்கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனைக்காக தங்கதேர் உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2000/-
இத்திருக்கோயிலின் மேற்கு வாயிலில் வெளிபுறத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 16 அறைகள் புதியதாக கட்டப்பட்டு திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு குறைந்த வாடகையில் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் விபரம்: அ. அறை எண்.4 - கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.1500/- ஆ. அறை எண்கள். 1,2,3,7,8,9,10,11,12,15 மற்றும் 16 - கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.1000/- இ. அறை எண்கள் 5,6,13 மற்றும் 14 - கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.750/- ஒரு அறையில் 4 நபர்கள் மட்டும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் தங்கும் ஒவ்வொரு நபருக்கும் நாள் 1க்கு ரூ.100/- வசூலிக்கப்படும்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலி தேவையெனில் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும்.
வாகன நிறுத்தும் இடம் சுவாமிமலை, தெற்கு வீதியில் சேவார்த்திகள் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ளது. கார் மற்றும் பேருந்துகள் நிறுத்துவதற்கு இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயில் தொடர்பான புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன.
எட்டாம் திருநாள் தோப்பில் முடிகாணிக்கை மண்டபம் அமைந்துள்ளது. திருக்கோயில் டிக்கெட் கவுண்டரில் விலையில்லா முடிகாணிக்கைசீட்டு பெற்றுக்கொண்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தலாம்.
பக்தர்கள் நேர்த்தி கடன் செய்யும் துலாபாரம் உக்கிரான அறையில் அமைந்துள்ளது. துலாபாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் துலாபார காணிக்கையினை செலுத்திய பின்னர் உரிய இரசீது வழங்கப்படுகிறது.
1.முதல் திருமணம் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று 2.பிறந்த தேதிக்கு ஆதாரமாக பள்ளி மாற்று சான்றிதழ் நகல் (உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்படவேண்டும்) 3.அனுமதி பெற்ற வழக்கறிஞர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்ட வாக்குமூலம் உரிய படிவத்தில். 4.ஆதார் அட்டை நகல் (உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்படவேண்டும்) 5.குடும்ப அட்டை நகல் (உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்படவேண்டும்) 6.பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விண்ணப்பம். 7.மணமகன் மற்றும் மணமகளின் புகைப்படங்கள் (2 செட்) 8.திருமணப்பத்திரிக்கை. 9.இரண்டாவது திருமணமாக இருந்தால் அதற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று. 10.இரண்டாவது திருமணமாக இருந்தால் முதல் மனைவி அல்லது கணவரின் விவாகரத்து / இறப்பு சான்று. கட்டண விபரம் 1.திருமண கட்டணம் ரூ.2500/- திருமண மண்டபம் தொடர்பான விபரம் தனியே அளிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் 2 திருமண மண்டபங்கள் உள்ளன. மண்டப எண்.1 திருக்கோயிலின் தெற்கு கோபுர வாசலை அடுத்து இடதுபுறமாக அமைந்துள்ளது. இதில் 200 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. நாள் ஒன்றிற்கான வாடகை ரூ.15000/- மட்டும். மண்டப எண்.3 திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசலுக்கு எதிர்புறம் அமைந்துள்ளது. இதில் 100 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. நாள் ஒன்றிற்கான வாடகை ரூ.10000/- மட்டும்.
திருக்கோயிலின் கீழ்பிரகாரத்தில் தென்கிழக்கில் உள்ள திருமடைப்பள்ளிக்கு அருகில் ஒன்றும், திருக்கோயிலின் கீழ்பிரகாரத்தில் கிழக்குவாசலில் வலதுபுறம் ஒன்றும் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலின் தெற்கு இராஜகோபுரத்திற்கு முன்புறம் இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது.
தாய்பாலூட்டும் அறை திருக்கோயிலின் தெற்கு இராஜகோபுரம் வாசல் உட்புறம் திருமண மண்டபம் எண்.2ல் அமைந்துள்ளது.
கோயில் மேற்கு பக்க நுழைவு பகுதியில், வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில், இலவச பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை வசதிகள் உள்ளன. .





