அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம்

Century
1st - 2nd நூற்றாண்டு
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
ப்ரணவாகார விமானம்
Sacred Tree (Sthalavriksha)
புன்னை மரம்
108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற திவ்ய தேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் இந்தத் திவ்ய தேசத்தில் எழுந்தருளி ஸ்ரீரங்கநாதரின் விஸ்வரூபம் கண்டருளிய பின்னர் இங்கிருந்து தங்களுடைய திவ்யதேசத்திற்குச் செல்வதாக ஓர் ஐதீகம். ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திருக்கோயில் ஆகும். வைணவத்தில் கோயில் என்ற அடைமொழி இத்திருக்கோயிலுக்கு மட்டும் உரியதாகும். இந்தத் தலத்தில்தான் ஆண்டாள், திருப்பாணாழ்வார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்தனர், ஆசியாவிலேயே மிக உயரமான 13 நிலைகளுடன் 236 அடி உயரத்தில் கட்டப்பட்ட பெரிய ராஜகோபுரம் உடைய திருக்கோயில் ஆகும். மஹாவிஷ்ணு தானாகத் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள்) பெரும் புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஸ்ரீரங்கம் ஆகும். இது 108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்ய தேசங்கள்) முதன்மையானதாகவும், உலகப் புகழ்பெற்ற ஒரு திவ்யதேசம் ஆகும். இது திருவரங்கத் திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் வழங்கப் பெறுகிறது. வைஷ்ணவ பேச்சுவழக்கில் கோயில் என்ற சொல் இந்தக் கோயிலை மட்டுமே குறிக்கிறது. இக்கோயில் பிரமிக்கத்தக்க மிகப் பெரிய அளவு கொண்டது. இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் திருவெண்ணாழி பிரகாரம், ராஜேந்திர மகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடன் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் வீதி, கலியுகராமன் திருவீதி ஆகிய ஏழு பிரகாரங்களைக் கொண்டது இத்திருத்தலம். இந்தப் பிரகாரங்கள் கருவறையைச் சுற்றி வரக்கூடிய மிகப்பெரிய மதில் சுவர்களால் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பிரகாரங்களிலும், தரிசனம் பெற வரும் எவருக்கும் ஒரு தனித்துவமிக்க காட்சி வழங்கும் வகையில், 21 பிரமிக்கத்தக்க அற்புதமான கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது. தனிச் சிறப்புகள் கோயில் பெரிய கோயில் ஊர்பேரரங்கம் பெருமாள்பெரிய பெருமாள் தாயார்பெரிய பிராட்டியார் தளிகைபெரிய அவசரம் வாத்தியம்பெரிய மேளம் பட்சணங்கள்பெரிய திருப்பணியாரங்கள் திருமஞ்சனம்பெரிய திருமஞ்சனம் திருப்பாவாடைபெரிய திருப்பாவாடை உத்ஸவம்பெரிய அத்யயன உத்ஸவம் ஜீயர்பெரிய ஜீயர் (மணவாள மாமுனி) என அனைத்தும் பெரியதாக அமைந்திருப்பது தான் இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. ஆண்டு முழுவதும் விமரிசையாகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒரே திருக்கோயிலாகும் . பகவத் ஸ்ரீ ராமானுஜரால் திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு அந்த நடைமுறை இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பள்ளியெழுச்சிப் பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் இத்திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள அரங்கனைத் தவிர வேறு எந்தத் திவ்ய தேச எம்பெருமானையும் மங்களாசாசனம் செய்யவில்லை என்பது சிறப்பு. இந்தத் திவ்ய தேசத்தில் காலை நடைபெறும் விஸ்வரூப சேவையில் காராம்பசு, குதிரை, யானை ஆகியவை முன்னிலையில் விஸ்வரூபம் நடைபெறுவது இத்திருக்கோயிலுக்கு உரிய தனிச்சிறப்பு ஆகும். ஸ்ரீ இராமானுஜர் இச்சிறப்புமிக்க திருத்தலத்தின் நிர்வாகத் திட்டங்களை வகுத்தவர் பகவத் ஸ்ரீ இராமானுஜர் ஆவார். இவர் கி.பி. 1017ல் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்தார். திரேதாயுகத்தில் மகாவிஷ்ணுவிற்கு ஆதிசேஷனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு மூத்தவரான பலராமனாகவும், கலியுகத்தில் ஸ்ரீஇராமானுசராகவும் அவதாரித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். திருக்கோயில் நிர்வாகத் திட்டங்களில் சீர்திருத்தம் செய்தார். அந்தணர் அல்லாதாரையும் திருக்கோயில் கைங்கர்யங்களில் நியமித்தார். பாஞ்சராத்ர ஆகமத்தில் உள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதைப்படி திருவாராதனங்களையும், சன்னதி உற்சவங்களையும் சிறப்பாகத் திருத்தியமைத்தார். இராமானுசர் 120 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதத்தில் எம்பெருமானுக்கு அருகில் நீண்ட காலமாக காலியாக இருந்த இடத்தை நிரப்புவதற்காக இவ்வுலகைவிட்டுச் சென்றார். இராமானுசரின் திருமேனியை 5ம் பிரகாரமான அகளங்கன் திருச்சுற்றில் உள்ள தன்னுடைய வசந்த மண்டபத்தில் இறுதி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று ஸ்ரீநம்பெருமாள் கட்டளையிட்டபடி நடந்தது. அதுவே தற்போது உடையவர் சன்னதியாக உள்ளது. இராமானுசரின் திருமேனியைப் பள்ளிப்படுத்திய பிறகு சன்னதியில் தானாகவே திருமேனி தோன்றி உள்ளது. இத்திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர். தற்போது சன்னிதியில் உள்ள இராமானுசர் திருமேனி தானான திருமேனியாகும். இந்தச் சன்னதியில் மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. அதற்குப் பதில் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், சந்தனம் ஆகியன கலந்த கலவை திருமேனியில் வருடத்தில் இரண்டு முறை (ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும்) சாற்றப்பட்டு திருமேனியை பாதுகாக்கபட்டு வருகிறது . தன்வந்திரி இத்திருக்கோயிலில் நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் பரமபதவாசல் எதிரே தன்வந்திரி சன்னதி அமையப் பெற்றுள்ளது. தீராத நோயுற்றவர்கள் இந்தச் சன்னதியில் தொடர்ந்து வழிபட்டு வர பூரண நலம்பெறுவர். ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சங்கு, சக்கரம் மற்றும் நான்கு திருக்கைகளுடன் அருள்பாலிக்கிறார். அருள்மிகு தன்வந்திரி சன்னதியில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் திருமஞ்சனம் நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருமஞ்சனம் கிடையாது. திருமஞ்சன கட்டணத் தொகை ரூ.1,200/- காலை 11.00 முதல் 12 மணி முடிய திருமஞ்சனம் நடைபெறும். தொடர்புக்கு திரு.எஸ்.டி.ஹரிகிருஷ்ணன், திருமஞ்சனப் பொறுப்பாளர் 8122485950. ஸ்ரீகருடாழ்வார் ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் திருச்சுற்று அல்லது ஆலிநாடன் திருச்சுற்று எனப் பெயர் பெற்ற நான்காவது திருச்சுற்றில் மிகப்பெரிய 14அடி உயர கருடாழ்வார் உள்ளார். இவர் மூலஸ்தானத்தின் நேர் எதிரில் அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளார். இவர் மீது அணியாக விளங்கும் படமெடுத்த பாம்பு பார்க்கிறவர்களை அச்சுறுத்தாமல் இருக்கவே முடியாது. பிரம்மா ஸ்ரீரங்கநாதனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரச்சொல்லி கருடனிடம் சொன்னதாகவும் அப்பொழுது கருடனைக் கண்ட பெருமாள் இங்கேயே இரு என சொன்னதன் போரில் மறு உத்தரவு தருகிறவரை இருகரங்களையும் கூப்பிய நிலையில் அமர்ந்திருப்பதாகவும் கூறுவார்கள்.
பரமபத வாசல் மற்றும் வடக்கு வாசலுக்கு இரண்டிற்கும் இடையில் உள்ள கோபுரத்தின் உள்ளே அருள்மிகு மேட்டழகிய சிங்கர் அமைந்துள்ளார் சுதையாக அமைந்துள்ளார்
கீழ பட்டாபிராமர் சன்னதி கோதண்டராமர் சன்னதியின் அருகாமையில் அமைந்துள்ளது( உள் மணல்வெளி)
நூறு கால் மண்டபத்தின் அருகாமையில் அருள்மிகு சொன்னவண்ணம் செய்த பெருமாள் அமைந்துள்ளார்
அஞ்சுகுழி வாசலின் மேற்புறத்தில் அருள்மிகு வாசுதேவப் பெருமாள் சன்னதி உள்ளது.
தாயார் சன்னதியின் அருகாமையில்(எதிர்புறத்தில்) அருள்மிகு தேசிகர் சந்நிதி அமைந்துள்ளது.
திருவந்திகாப்பு மண்டபத்திற்கு அருகாமையில் அருள்மிகு தொண்டரடி பொடியாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.
கருட மண்டபத்தின் அருகாமையில் திருக்கச்சிநம்பிகள் சன்னதி அமைந்துள்ளது இச்சன்னதியில் லட்சுமி நாராயண சுவாமி சன்னதி, வரதராஜ பெருமாள் சன்னதி, திருக்கச்சிநம்பிகள்.
சந்திரபுஷ்கரணியின் அருகாமையில் தன்வந்திரி சன்னதி அமைந்துள்ளது மற்றும் சன்னதியில் திருமஞ்சனங்கள் நடைபெறும்.
திருக்கொட்டாரத்தின் உட்பகுதியில் அருள்மிகு செங்கமலவல்லி நாச்சியார் சன்னதி அமைந்துள்ளது
திருக்கொட்டார பிரகாரத்தின் கடைசியில் அமைந்துள்ளது மேல பட்டாபிராமர் சன்னதி.
அருள்மிகு உடையவர் சன்னதி பார்த்தசாரதி சன்னதியின் அருகாமையில் அமைந்துள்ளது
பிள்ளை லோகாச்சாரிகள் உடையவர் சன்னதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
கொட்டார பிரதட்சணம் கடைசியில் முதல் ஆழ்வார்கள் சன்னதி அமைந்துள்ளது
ஸ்ரீ ஜெயந்தி உறியடி திருவிழாக்கள் நடைபெறும்.
சந்திர புஷ்கரணி அருகாமையில் உள்ள கோதண்ட ராமர் சன்னதி அமைந்துள்ளது.
கார்த்திகை கோபுர அனுமார் என்ற சிறப்பு பெயர் இந்த அனுமாருக்கு உண்டு.
சக்கரத்தாழ்வார் சன்னதியில் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு.
அருள்மிகு கம்பத்தடி அனுமார் மூலவருக்கு இணையானவர், திருமஞ்சனம் நடைபெறும்.
ஸ்ரீரங்கத்தைச் சுற்றிப் புண்ணிய திருக்குளங்கள் உள்ளன. அவைகளில் சந்திரபுஷ்கரணியே முதன்மையானதும் தலைசிறந்ததாகும். மற்ற புண்ணிய தீர்த்தங்கள் சந்திர புஷ்கரணியைச் சுற்றி எட்டு இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்று எட்டுத் திசையிலும் அமைந்திருக்கின்றன. சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புண்ணாக தீர்த்தம், வகுள தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், பில்வ தீர்த்தம் மற்றும் சூரியபுஷ்கரணி. ஆகியன தல தீர்த்தங்கள் ஆகும் சந்திரபுஷ்கரணியானது ஆலிநாடன் திருச்சுற்றில் கோதண்டராமர் சன்னதிக்கு அருகில் உள்ளது. சந்திரபுஷ்கரணியில் நீராடினால் நமது எல்லாப் பாவங்களும் தீரும். காஸ்யப மகரிஷியினால் சாபம் பெற்று தன் ஒளியிழந்த சந்திரன் இந்தப் புஷ்கரணியில் நீராடி ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு மீண்டும் ஒளி பெற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தப் புஷ்கரணியின் கரையில் அமைந்திருக்கும் புன்னை மரம் சந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தத் தீர்த்தக் கரையில் வியாசர் பகவான் எழுந்தருளியிருக்கிறார். புஷ்கரன், புஷ்கராக்ஷன், குமுதன், காலன் ஆகிய நால்வர் இதற்குக் காவல் புரிகின்றனர். இந்த மரத்தின் கீழ் செய்யப்படும் ஜபம், யாகம் யாவும் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இத்தீர்த்தத்தில் தில(எள்ளு) தானம் செய்வது மிகச் சிறப்புடையதாகும்.
ஸ்ரீ உடையவர் சன்னதி ஸ்ரீ பிரம்மா
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம் ராமானுஜர் யாதவப்பிரகாசர்தன்
ஸ்ரீ உடையவர் சன்னதி யமுனை துறைவர் திருமண்டபம் சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி ஸ்ரீ பரம பதநாதர் சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம்
ஸ்ரீ உடையவர் சன்னதி சுவரோவியம்
சுவரோவிய விவரம் அருள்மிகு அரங்கநாதசுவாமி மூலவர் கருவறை பிரகாரச் சுவற்றில் நாயக்கர் காலத்திய பாகவதத்தின் காட்சிகள் ஓவியங்களாகக் காணப்படுகின்றன. இராமானுசர் சன்னதி மேற்கூரையில் திருப்பாவை பாடல்களை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. தெற்கு பிரதான வாயில் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் உள்ள நான்கு கால் மண்டபம் மேற்புறம் இத்திருக்கோயிலின் வாகனங்கள் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன
ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள்
திருமேனி தன்மை - கருங்கல் இருப்பிடம் கிழக்கு வாயில் வெள்ளை கோபுரம் அருகில் சிற்பங்கள் வகை குதிரை, யாளி, போர் வீரர் சிற்பங்கள் விவரம் - சேஷராயர் மண்டபம் யாளி, போர் வீரருடன் குதிரை.
ஸ்ரீ ரங்க விலாச மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தூண்
வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள்
கருட மண்டபம் சிற்பம்
ஸ்ரீ வேணுகோபால சன்னதி கண்ணாடில். முகம் பார்க்கும் பெண்
குதிரை வீரன் புலியை தாக்குதல் சேஷ ராயர் மண்டபம்
பக்தர்கள் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதான திட்டம் 13-09-2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் குறைந்தது 3000 பக்தர்கள் உணவு அருந்தி செல்கின்றனர். 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ரூ.3,500/- செலுத்த வேண்டும். மேலும் 100 நபர்களுக்கு கட்டளை ஏற்படுத்த ரூ.70,000/- வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இதன் மடங்கில் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் செய்ய விருப்பமோ அதனை கணக்கிட்டு செலுத்த வேண்டும்.
பக்தர்கள் தங்கும் விடுதி 171 அறைகள் உள்ளன. இவற்றில் ஒரே நாளில் 886பக்தர்கள் தங்க இயலும் . கட்டண தொகை குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.2000/- வரை உள்ளது. பக்தர்கள் தங்கும் விடுதி அறைகள் பதிவு செய்து கொள்ள தொடர்பு எண்.
அர்ச்சகர் பயிற்சி பள்ளி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பின்படி வைணவ ஆகமத்தில் பாஞ்சராத்ர முறைப்படி ஆகமங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இது ஓராண்டு பயிற்சி ஆகும். தொடர்புக்கு திரு. பி.ஆர். கிருஷ்ணா, தலைமை ஆசிரியர். 94433 98769 இந்த மையம் 2017 ஆம் ஆண்டு இராமானுசரது ஆயிரமாவது ஆண்டு நிறைவினையொட்டி தொடங்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக அங்கீகாரத்துடன் இளங்கலை வைணவம், முதுகலை வைணவம், முதுகலை ஸ்ரீபாஷ்யம் ஆகிய பாடப் பிரிவுகள் 2020 ஆம் ஆண்டு முதல் நடத்தப் பட்டு வருகின்றன. தொடர்புக்கு முனைவர் ந. ஜெயவித்யா, ஒருங்கிணைப்பாளர். 80569 13423
பக்தர்கள் காணிக்கைப் பொருட்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் இடம்.
தகவல் நிலையம் கார்த்திகை கோபுரம் அருகில் தகவல் மையம் மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த ஆன்மீக புத்தக விற்பனை நிலையத்தில் இத்திருக்கோயில் தல வரலாறு, பூலோக வைகுண்டம், ஸ்ரீரங்கம் கலை மற்றும் கட்டிடக்கலை, பூமியில் சொர்க்கம், ஜீனைன் அபோயர் எழுதிய ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு நுல்கள் விற்பனை செய்யப்படுகிறது.
திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் மருத்துவ முதலுதவி மையத்தின் மூலம் முதலுதவி கிடைக்கப்பெற்று பயனடைகின்றனர். மருத்துவர்கள் ஒருவர், செவிலியர்கள் ஒருவர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உள்ளனர்.
கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதி அருகே மணல்வேலியின் உள்ளே நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் கோவில் வரலாறு, தொன்மை, சிறப்புகள் குறித்த புத்தகங்கள் உள்ளன. 3000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
மூன்று வாசல்களில் (தெற்கு, வடக்கு, கிழக்கு) மொத்தம் 25 கழிப்பறைகள் மற்றும் 11 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
15 சக்கர நாற்காலிகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக தகவல் மையத்திற்கு அருகில் இலவசமாக உள்ளது. 1) ச.பாஷ்யம் / ஸ்ரீபாதம் / 94428 75011 2) எம்.வளர்மதி / திருவலகு / 9865390851 3) மணி / தற்காலிக பணியாளர் / 78250 98125
திருக்கோயில் சுற்றியுள்ள 4 உத்திர வீதிகள் 4 சித்திரை வீதிகளிலும் வாகனம் நிறுத்த இயலும். மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு கூடுதலாக யாத்ரி நிவாஸ் எதிரில் மற்றும் கிழக்கு வாசல் அருகே உள்ள இடத்திலும் 10- ஏக்கருக்கு குறையாமல் வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த விரும்பும் பக்த்தர்கள் அம்மாமண்டபம் அருகில் உள்ள முடி கொட்டகையில் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் அருகே உள்ள முடி கொட்டகையில் செலுத்தலாம்.
மிதியடி பாதுகாப்பு இடம் திருக்கோவிலின் ரங்கா ரங்கா கோபுரம், கிழக்கு வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு நுழைவு வாயில் ஆகிய மூன்று இடங்களில் உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களை கோயில் வளாகத்திற்குள் கட்டணமில்லாமல் ஏற்றிச் செல்வதற்கென பேட்டரி கார்கள் 4 சேவையில் உள்ளது
- குடிநீர் வசதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 6-இடங்களில் மொத்தம் 5250 லிட்டர் கொள்ளளவில் உள்ளது மேலும் 22 டிரம்களில் தலா 75லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வசதிகள் உள்ளன.
பிரதான தெற்கு வாயில் (ரெங்கா ரெங்கா கோபுரம்) அருகே பொருட்கள் வைப்பு அறை உள்ளது.





