அருள்மிகு பவஔஷதீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

Century
8th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
திராவிடன்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம் மரம்
இத்திருக்கோயில் அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள மாங்கல்ய தீர்த்த குளம் (மங்களநாயகி தீர்த்தம்) திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக உள்ளது.
இத்திருக்கோயிலில் அஸ்வின் தேவர்கள் தென்கிழக்கு மூலையிலுள்ள எட்டி மரத்தில் வாசம் செய்து வருகிறார்கள். இவர்கள் தேவலோக மருத்துவர்கள். ஜீவராசிகளை நோய் நொடியிலிருந்து காப்பவர். ஆபத்தில் ஒடிவந்து காப்பவர்கள். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பிறவி மருந்தீசர் ஆவார். இறைவனிடமிருந்து மருத்துவ சக்தியைப் பெற்று அனைவரையும் காத்து வருபவர்கள் இரட்டையர்களான அஸ்வினி தேவர்கள். இந்த நட்சத்திரத்தில், பிறந்தவர்களக்குப் பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிளோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும். அதி தேவதை அஸ்வின் தேவர்கள், அதி தெய்வம் சரஸ்வதி தேவி . தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு ஆலகாலவிஷமும் தோன்றியது. யாருக்கும் கெடுதல் நேர்ந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் சிவபெருமான் அந்த விஷத்தை அருந்தினார். அஸ்வின் தேவர்கள் தம்மிடம் இருக்கும் விஷத்தால் அஸ்வின் நட்சத்திரத்திரகாரர்கள் நலனைக் காத்து வருகிறார்கள் என்றால், சிவபெருமான் அவர்களுடைய கெடு குணங்களை தான் விழுங்கி அவர்களுக்கு நல்லன மட்டுமே கிடைக்குமாறு செய்கிறார். அந்த விஷத்தின் அடையாளம் தான் எட்டி மரம் . சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் அஸ்வினி தேவர்கள் இந்த எட்டி மர வனத்தில் தவம் இருந்திருக்கிறார்கள்ஆகவே அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும்.
அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலம். சப்தவிடங்க ஸ்தலம். அம்பாள் சன்னதியின் எதிர்புறம் உள்ள குளம் மாங்கல்ய தீர்த்தம் என்று அழைக்கப்டுகிறது. இத்தீர்த்தத்தில் சுமங்கலிகள் மூழ்கி வழிபட்டால் நித்திய சுமங்கலிகளாகவும், அமங்கலிகள் வழிபட்டால் வரும் பிறப்புகளில் சுமங்கலிகளாகவும் வாழ இறைவியருள் புரிந்தார்.
சிவபெருமான் வில்வ மரத்தடியில் தோன்றியருளியதால் வில்வாரணியம் (வில்வவனம்) என்றும் பிரமபுரி என்றும் ,ஜல்லிகை என்ற பெண்ணின் கணவனை உயிர்ப்பித்த காரணமாக ஜல்லி காரணியம் என்றும், நவக்கிரகங்கள் வழிபட்டுப் பேறு பெற்றதால் நவக்கிரகபுரம் என்றும் இத்தலத்திற்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. இத்தலப் பெயர் திருத்தருப்பூண்டி என வழங்குவதற்கேற்ப இத்தலத்தின் தலவிருட்சம் திருத்தருவாகிய வில்வ மரமாக விளங்குவதை இன்றும் காணலாம். திருத்தருப்பூண்டி இன்று திருத்துறைப்பூண்டி என்று அழைக்கப்பெறுகிறது. அதற்கேற்ப கல்வெட்டுக்களிலும் அருமொழித்தேவவளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்துத் திருத்துறைப்பூண்டி என்று காணப்பெறுகிறது.
தவம் சிறக்கத் தகுந்த தலம் திருத்தருப்பூண்டி எனத்தேர்ந்து அகத்தியர், வாமதேவர், காசிபர், அத்தரி, பரத்துவாசர்,கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, வசிட்டர் முதலான ஒன்பான் முனிவர்கள் இங்கு வந்து ஒவ்வொருவரும் தனித்தனி தீர்த்தம் (நவதீர்ததம்) உண்டாக்கி சிவலிங்கப் பிரதிட்டை செய்து சாயுச்சிய பதவி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் உருத்திர பாசுபதம் எனும் யாகம் செய்தனர். இறைவன் அவர்கள் முன் தோன்றி சந்திரசூடாமணியெனும் சுந்தர தாண்டவத்தைச் செய்தருளி அதைத் தரிசித்ததால் அவர்களுக்கு சாயுச்சிய பதமும் ஈந்தளினார் அவர்கள் வேண்டுகோளின்படி சித்திரை மாதம் சுக்கிலபட்சம் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் மதியம் நவதீர்த்தங்களில் மூழ்கி சந்திரசூடாமணித் தாண்டவரைத் தரிசித்தவர்கட்கு சாயுச்சியமளிக்க இறைவன் சந்திர சூடாமணித் தாண்டவராக அமர்ந்தருளினார்.
திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் தம்மை வழிபடுபவர்களுடைய பிறவியாகிய பிணியை நீக்குவதால் பிறவி மருந்தீசர் என்றும் மருந்தீசர் என்றும் பெயர் பெற்றிலங்குகிறார். வடமொழியில் ஸ்ரீபவஅவுஷதீஸ்வர்ர் என்று அழைக்கப் பெறுகிறார். இச்சிவலிங்கப்பெருமான் பாதாள லிங்கம் என்று பெயர் பெற்று விளங்குகிறார். இப்பெருமான் திருத்தருவனமாகிய வில்வ வனத்தில் எழுந்தருளியிருப்பதால் வில்வ வனநாதர் என்று சிறப்புறக்கூறப் பெறுவர். மருந்தீசர் கோயிலுக்கு வடபால் தனிக்கோயிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் அன்னை பெரியநாயகி வட மொழியில் பிரகந்நாயகி என்று அழைக்கப்பெறுகிறார், தீர்த்தவல்லி என்னும் சிறப்புத் திருப்பெயரும் அன்னையாருக்கு வழங்கப்பெறுகிறது
குடமுழா எனும் பஞ்சமுக வாத்தியம் தெய்வீக இசைக் கருவியாகும். நந்தித் தேவர் இசைக்க சிவபெருமான் நடனமாடுவதாக இவ்விசைக்கருவி பற்றி இலக்கியங்கள் பெரிதும் வியந்து பேசுகின்றன. இத்திருக்கோயிலில் உள்ள குடமுழா வாத்தியம் அளவில் மிகப் பெரியதாக காணப்படுகிறது. இங்குள்ள தியாகராஜர் திருமேனிக்கு முன்பாக புரட்டாசி மாதம் நிறைமதி நாளன்று குடமுழா என்னும் இசைக்கருவி வாசிக்கப்படும். இவ்வாத்தியத்தின் கீழ்ப்பகுதியில் ஸ்வஸ்திஸ்ரீ இக்குடவிழா சமைப்பித்திட்டார் சிகாருடையார் மல்லாண்டாராண சோழகோனார் இதன் எடை 2330 பலம் என்று தமிழ் எண் குறியீட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு இக்குடமுழா குடவிழா என்றும், இவ்வெழுத்துப் பொறிப்பின் வாயிலாக சிகாரைச் சேர்ந்த மல்லாண்டார் என்னும் சோழகோனார் இதனைச் செய்தார் என்றும் இதன் எழுத்தமையிதியினைக் கொண்டு பார்க்கையில் இ.து கி.பி 12-13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் இரண்டு திருக்கோயிலில் பஞ்சமுக வாத்தியங்கள் உள்ளது. ஒன்று திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலிலும் மற்றொன்று திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலிலும் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள பஞ்சமுக வாத்தியமே மிகப் பெரிதான ஒன்றாகும். சிவனின் ஐந்து முகங்களைக் குறிப்பதால் இதற்குப் பஞ்சமுக வாத்தியம் என்ற பெயர் உள்ளது. திருவிழாக் காலங்களில் தியாகேசப் பெருமான் திருமுன் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் காட்சி அழகே அழகு. சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவி , குடமுழா, குடபஞ்சமுகி என்று மற்றொரு பெயரும் உண்டு. பஞ்சமுக வாத்தியத்தை இசைக்கும்போது வெவ்வேறு வகையான இசை ஒலி எழுகிறது. ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து விதமான ஒலி எழுகிறது. இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கும்போது ஏழு முறையும் , ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும்.
பேரூழிக்காலத்தில் திருமால் திருப்பாற்கடலில் ஆலிலையின் மேல் தம் ஆன்மார்த்த மூர்த்தியாகப் பூஜை செய்து வந்த விடங்கராகிய தியாகேசரைத் தம்மார்பில் வைத்துப் பள்ளி கொண்டிருந்தார் தியாகேசர் ஆணையின் வண்ணம் திருமால் பிரதேவரை உண்டாக்கி உலகத்தைப் பண்டுபோல் படைக்கப் பணித்தருளினார். பிரமதேவரும் அவ்வாறே உலகை உண்டாக்கி மனோவதி நகரில் விடங்கரை வழிபட்டுப் புகழுடன் குறையின்றி வாழ்ந்து வந்தார். வார்க்காலி எனும் கொடிய அரக்கன் முதலான சத்துருக்களின் பயம் நீங்கத் திருமாலை வேண்டி இந்திரன் விடங்கரைப் பெற்றுப் பூசித்து வந்தான். பின் வலாசுரன் தேவேந்திரனுக்கு இடையூறு செய்ததால் அவனை வெல்பவர்க்கு வெள்ளையானை, வெள்ளைக்குடை , இந்திராணி தவிர எதையும் அளிப்பதாகத் தேவேந்திரன் அறிவித்தான். விடங்கரை மறந்தான் இதையுணர்ந்த விடங்கப் பெருமான் பூலோகம் வந்திடத் திருவுளம் பற்ற வில்வாரணியத்தில் சிவராத்தியன்று வில்வவன நாதரை வழிபட்ட அயோத்தி மன்னன்முசுகுந்த சக்கரவர்த்தி முன் தோன்றி இந்திரனிடம் வலாசுரனை வெல்வதாகக் கூறி விடங்கரைக் கேட்டுப் பெறுமாறு பணித்தருளினார். இந்திரன் பொய் பிம்பத்தைக் காட்டி இதுதான் விடங்கர் என்று கூறிவிடுவான் என்பதால் விடங்கப் பெருமானின் உண்மைக் கோலத்தை இங்குக் காட்டியருளுமாறு முசுகுந்தர் வேண்டினார். அவர் வேண்டுகோளுக்கிணங்கி விடங்கப் பெருமான் மருந்தீசர் கருவறைக்குத் தென்மேற்குப் பக்கத்தில் தீர்த்தமத்தியில் சேமாஸ்கந்த வடிவில் பஞ்சமுக வாத்தியம் முழுங்கக் காட்சியளித்துத் தம்மை தேவேந்திரனிடமிருந்து பெறுமாறு பணித்தருளினார். இக்காட்சியை அனைவரும் காண இக்கோலத்துடன் வீற்றிருந்தருள வேண்டிய முசுகுந்த சக்கரவர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்தமத்தியில் தோன்றிய விடங்கப் பெருமான் தீர்த்த விடங்கத்தியாகேசராகக் காட்சி அளித்தருள்வதை இன்றும் யாவரும் கண்டு மகிழ்கிறோம்
சிவ பெருமான் திருக்கோயிலுக்கு எதிரே இலங்கும் தீர்த்தம் பிரமதீர்த்தம் எனப்பெறும். பிரமதேவரால் உண்டாக்கப் பெற்ற இத்தீர்த்தம் இப்பொழுது பொதுவாக திருக்குளம் என அழைக்கப்பெறுகிறது. இத்தீர்த்த்த்திற்கு ஒப்பும் உயர்வும் உடைய தீர்த்தம் எங்கும் இல்லையென்று கூறும்படி உலகத்திலுள்ள நவகோடி தீர்த்தங்களும் வந்து ஒடுங்குவதற்கு இத்திருக்குளம் இடமாயிலங்குகிறது. இத்தீர்த்தத்தில் முழுபினவர்கள் எல்லாத் தீர்த்தங்களிலும் முழுகின பலனையடைவார்கள். இதில் பக்கத்திற்குப் பதினாறு கட்டங்களாக நான்கு பக்கங்களுக்கும் அறுபத்தி நான்கு கட்டங்கள் உள. பிற தீர்த்தங்களும் இத்தகைய பெருமையுடையன எனல் மிகையன்று.
பெரிய நாயகி அம்மன் திருக்கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள அமிர்த தீர்த்தம் எனப்பெறும் மாங்கல்ய தீர்த்தம் பிரம்ம தேவரால் உண்டாக்கப்பெற்ற தீர்த்தமாகும். ஜல்லிகை என்பவளுடைய இறந்துபோன கணவனை உயிர் பெற்றெழச்செய்தது இத்தீர்த்தமேயாகும். சுமங்கலிகள் இத்தீர்த்தத்தில் முழுகினால் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வார்கள். இத்திருக்குளத்திற்கு அமிர்தபுஷ்கரணி , மாங்கல்ய தீர்த்தம் என்ற பல பெயர்கள் உள்ளன.
ஆண்டிற்கு ஒரு முறை இக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறும். இது தீர்த்தவாரி அல்லது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாங்கல்ய தீர்த்தக்குளம் மாங்கல்ய தோஷத்தை போக்கும் தலமாக உள்ளது.
திருக்கோயிலுக்கு ஏதிரே உள்ள தீர்த்தம் பிரம்மதீர்த்தம் எனப்பெறும். பிரம்ம தேவரால் உண்டாக்கப்பெற்ற இத்தீர்த்தம் இப்பொழுது பொதுவாக திருக்குளம் என அழைக்கப்படுகிறது. புல எண் 184/4 ல் 4.14 ஏக்கர் செண்ட் பரப்பளவில் திருக்குளம் அமைந்துள்ளது.
சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜசம்ஹார மூர்த்தி தாண்டவம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் கஜசம்ஹரமூர்த்திக்குக் கருவறை உள்ள திருக்கோயிலாகும். வழுவூர் என்ற ஊரில் அமைந்திருக்கும் உற்சவர் கஜசம்ஹாரமூர்த்தியின் கருவறை விக்ரகம் இந்தத் திருக்கோயிலில் உள்ளதாகத் தல புராணம் கூறுகிறது. தெற்கு முகம் அகோரமுகம் என்ற பழமொழிக்கு ஏற்ப இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் கஜசம்ஹாரமூர்த்தி தெற்கு முகமாக அமைந்துள்ளார். அமவாசை அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் உள்ள கஜம்ஹாரமூர்த்தியை வணங்குவதன் மூலம் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. ஆணவத்தையும் அழிப்பவர்
தினசரி 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத் திட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எந்த நாளிலும் தினசரி உணவுக்காக ரூ 1750/- செலுத்தி பங்கேற்கலாம். பொதுமக்கள் பிறந்த நாள், திருமண நாள், அல்லது எந்த ஒரு நல்ல நாள் போன்ற எந்த நாளிலும் பக்தர்களுக்க உணவளிக்க ரூ 1750/- செலுத்தலாம்.
திருக்கோவில் அலுவலகத்தில் வயதானோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் சக்கர நாற்காலி ஓன்று உள்ளது
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நான்கு பக்கமும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது
50 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம், அல்லது 5 கார்கள் நிறுத்தலாம்.
கொடிமரத்திற்கு இடது புறமாக அலுவலக வாசலில் குடிநீர் வசதி ஒன்று உள்ளது.
இரண்டு வரிசையாக நான்கு காலமாக அமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வசதிகளுடன் ஆண்களுக்கு ஒன்றும் மற்றும் பெண்களுக்கு இரண்டும் கழிவறை தனித்தனியாக உள்ளது.
மாங்கல்ய தீர்த்தம் திருக்கோயிலுக்குள் உள்ளது . இது தன் கணவரின் ஆயுள் நீடித்து இருக்க பெண்கள் நீராடுவர் . ஆண்களும் நீராடுவர் திருக்கோவிலுக்கு எதிரே உள்ள திருகுளம் அனைவரும் நீராட படித்துறை வசதியுடன் உள்ளது




